374 • அகமும் புறமும்
–––––––––––––––––––––––––––––––––––––
பக்தியின் உண்மைத் தத்துவத்தை அறிந்தவர் இவ்வாறான வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்வதில்லை.
எனவேதான் பரம்பொருளிடம் முறையிடும் பொழுது
யாஅம் இரப்பவை
பொருளும், பொன்னும், போகமும் அல்ல; நின்பால்
அருளும், அன்பும், அறனும் மூன்றும்
உருளினர்க் கடம்பின் ஒலி தாரோயே!
(பரிபாடல் 5–80)
என்று வேண்டியதாகத் தெரிகிறது.
இப்பரிபாடலின் நான்கு அடிகள் இத்தமிழ்ச்சாதியின் அன்றைய வாழ்க்கைக் கொள்கை, பண்பாட்டு வளர்ச்சி, என்பனவற்றைத் தெளிவாக எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
சிவ விஷ்ணு வழிபட்டில் இப்பண்டைத் தமிழர் மூழ்கி இருப்பினும், இந்நாட்டில் வாழ்வதற்கென வந்த பிற புலத்தவரான சமணர், பௌத்தர் என்பவர்களோடு, மாறுபாடு கொள்ளவோ, மனக் காழ்ப்பு கொள்ளவோ செய்கிலர்.
தனி மனிதனுடைய சமய நம்பிக்கை தெய்வநம்பிக்கை, சமய வாழ்வு என்பவை அம்மனிதன் சமுதாயத்துடன் உறவாடும்பொழுது உலக வாழ்க்கையில் குறுக்கிடவில்லை என்று அறிகிறோம்.
எனவேதான் இவ்வியல்பினரான தமிழருடன் வந்த வடபுலத்தாரும் பூசலற்று காழ்ப்பு அற்று வாழ்ந்தனர் என்று அறிகிறோம்.
இங்குள்ளார் தாமும் தம்முள் சைவ, வைணவ, சமண சாக்த, பௌத்தச் சார்பினரேனும் கூட்டாக வாழ்ந்தனர்.