பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர்
பற்றும் சகோதரத் தன்மை
யாருக்கும் தீமை செய்யாது - புவி
எங்கும் விடுதலை செய்யும்

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

இதே போல் ‘விடுதலை’ என்ற பாட்டிலும் அவர் இவ்வாறு பாடியுள்ளார்:

விடுதலை! விடுதலை! விடுதலை!
பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை;
பரவரோடு குறவ ருக்கும்
மறவருக்கும் விடுதலை;
திறமை கொண்ட தீமை யற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே (விடுதலை)

ஏழையென்றும் அடிமை யென்றும்
எவனும் இல்லை ஜாதியில்;
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தியாவில் இல்லையே;
வாழி கல்வி செல்வம் எய்தி
மன மகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒரு நிகர்ச
மான மாக வாழ்வமே (விடுதலை)

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்து வோம்;
வைய வாழ்வு தன்னில் எந்த
வகையினும் நமக் குளே

16