பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலை லட்சியத்திற்காக அவற்றைப் பிரயோகிக்கும் வாய்ப்பைக் குறித்தும் விவாதித்ததைப் பற்றித் திரு. வி. க. எழுதியிருக்கிறார். அதே நூலில் தமக்கே உரித்தான நடையில் அவர் இவ்வாறு எழுதுகிறார்:

"எனது வாழ்க்கை தொடக்கத்தில் சமயப் பணியில் ஈடுபட்டது. அதனால் பல சமய ஆராய்ச்சிப்பேறு எனக்குக் கிடைத்தது. அவ்வாராய்ச்சி பொதுமை உணர்ச்சியை உண்டாக்கியது. சமயங்களின் அடிப்படையாய் உள்ள பொதுமை - சமரசம் - ஏன் உலகில் பரவவில்லை என்று யான் எண்ணுவேன். சிற்சிலபோது ஆழ எண்ணுவேன். எனக்கு ஒன்றும் விளங்குவதில்லை. சிங்காரவேல் செட்டியார் கூட்டுறவு சிறிது விளக்கம் செய்தது. அவ்விளக்கம் பொதுமையை உலகில் பரப்பி நிலைபெறுத்தவல்லது காரல் மார்க்ஸ் கொள்கை என்ற எண்ணத்தை என் உள்ளத்தில் இடம் பெறச் செய்தது." இதன் மூலம் திரு. வி. க, சமய நம்பிக்கை மிக்கவராக விளங்கிய போதிலும், சமுதாய ஏற்றத் தாழ்வைப் போக்கிச் சமநீதி வழங்கும் சஞ்சீவி மூலிகை மார்க்சியம் ஒன்றேயாகும் என்றே அவர் கருதினார் எனத்தெரிகிறது. மேலும், "கட்டுரைத்திரட்டு”, "இந்தியாவும் விடுதலையும்" ஆகிய அவரது நூல்களும் பிற நூல்களும் மார்க்சிய - லெனினியக் கொள்கைகளைக் குறித்து அவர் நடத்திய சிந்தனை விசாரங்களையும், அக்டோபர் புரட்சியின் சாதனைகளின்பால் அவர் காட்டிய பாராட்டுணர்வையும் புலப்படுத்துவனவாகும்.

மேலும், இன்றைய "இந்திய - சோவியத் கலாசாரக் கழகத்தின் முன்னோடியான சோவியத் நண்பர்கள் சங்கம்", இரண்டாம் உலகப் போர் ஆண்டுகளின்போது, நாஜி ஹிட்லரின் படைகள் சோவியத் யூனியனைத் தாக்கிய சில நாட்களில் இந்தியாவில் தொடங்கப்பட்டபோது, அதன் தமிழ்நாட்டுக் கிளையின் தலைவராக திரு. வி. க. வே தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்களில் அவர் எழுதிய எழுத்துக்களும், மற்றும் தமிழகமெங்கணும் அவர் சுற்றுப் பயணம் செய்து ஆற்றிய சொற்பொழிவுகளும் சோவியத் யூனியனுக்குத்

27