பக்கம்:அங்கும் இங்கும்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

"'ஆகா'வென்று நூலைக் கொடுத்துவிட்டார். புரட்டிப் பார்த்தோம். நிறையப் படங்கள். என்ன படங்கள்? கவர்ச்சிப் படங்களா ? இல்லை. கவர்ச்சிப் படங்களால் பிழைக்கத்தான் நாம் பிறந்திருக்கிறோமே ! பின் என்ன படங்கள் ? விஞ்ஞானச் சோதனைப் படங்கள். கண்ட தாளிலா? இல்லை. நல்ல தாளில் அழகான அச்சு தெளிவான விளக்கப் படங்கள் தென்பட்டன. விஞ்ஞான நூலென்று புரிந்துகொண்டோம். பாட்டாளி படிக்கும் அவ் விஞ்ஞான நூல் எத்தகையது? விளையாட்டு விஞ்ஞானமா ? தொடக்க நிலை விஞ்ஞானமா? இந்தக் கேள்விகளைக் கிளப்பினேன்.

மொழிபெயர்ப்பாளர் என் கையிலிருந்த நூலை வாங்கினார். சில வினாடிகள் புரட்டினார். "இது கல்லூரி மட்ட விஞ்ஞானம்" என்று பதில் உரைத்தார். காரோட்டி கல்லூரி விஞ்ஞானத்தைக் கற்பதா? கல்லுாரிக்குள் அல்லாது தெருவில் தொழிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது கற்பதா என்று வியந்தேன். அவர் கல்லூரி மாணவரா என்று எல்லையற்ற வியப்போடு கேட்டேன்.

"ஆம்; இப்போது கல்லூரிகளுக்கு விடுமுறை கல்லூரிகள் திறந்ததும். மாலைக் கல்லூரி ஒன்றில் சேர்ந்து விஞ்ஞானம் கற்கப் போகிறேன். ஆகவே, கல்லூரிக் கல்விக்கு முன் கூட்டியே, ஆயத்தஞ் செய்து கொள்கிறேன்" என்று காரோட்டி பதில் கூறினார். வருமுன் கற்போர், இரஷிய மாணவர்; பாட்டாளி மாணவர்கூட என்பதை அறிந்து உண்மையில் மகிழ்ந்தேன்.

இந்நிகழ்ச்சி என் சிந்தனையைத் தூண்டிற்று. நமக்கு ஓர் அரிய படிப்பினையன்றோ ? ஏழ்மையுற்ற நம் நாட்டிலே நாளெல்லாம் பாடுபட்டாலும் கிடைப்பது அரை வயிற்றுக் கஞ்சியே. அறிவாற்றலும் சேர்த்தால்தானே உழைப்பின் பயன் பெருகும் ? இவ்வறிவாற்றலைப் பெறுவது எவ்வாறு ? பகலெல்லாம் உழைப்பவர்களும் இரவில் பள்ளி