பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகன் அரசாட்சி

51

மொழியிலிருந்தே நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லையாயினும் வேறொருவழியாக வெகு இன்பகரமான ஆதாரம் அகப்பட்டிருக்கின்றது. கத்தியவாட் அல்லது குஜராத் எனப்படும் தீபகற்பத்தின் நடுவில் கிர்நார் என்ற ஒரு மலை உண்டு, அங்குள்ள பாறையில் அசோகனுடைய பதினான்கு சிலாசாஸனங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. முன் அப்பாகத்தை ஆண்டுவந்த வேறு பல அரசரின் லிகிதங்களும் அங்கிருக்கின்றன. கி.பி. 150-ம் ௵ல் அங்கே அரசாட்சி செய்த ருத்ரதாமன் என்ற க்ஷத்ரப அரசன் எழுதியுள்ள லிகிதத்தில் அசோகனது பெயரும் அவன் விவசாயத்திற்காகச்செய்த வேலையொன்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சுதர்சன ஏரி என்ற பெரிய ஏரி ஒன்று பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது. ருத்ரதாமன் காலத்தில் அவ்வேரி பல விதமான சீர்கேடுற்று விவசாயிகளுக்கு உதவாதிருந்தது. அவன் சுதர்சன ஏரியைச் சீர்திருத்தி அதற்குப் புதிய கால்வாய்களும் சீப்புக்களும் அமைத்த விவரங்களே அவனுடைய கல்வெட்டின் விஷயம். ஆயினும் அந்த லிகிதத்தில் ருத்ரதாமன் சுதர்சன ஏரியின் பூர்வ சரித்திரத்தையும் குறிப்பிடுகிறான், அது சந்திரகுப்தன் காலத்தில் முதலில் வெட்டப்பட்டதென்றும், ஆனால் - அப்போது ஜலத்தைப் பாய்ச்ச அவசியமான கால்வாய்கள் யாவும் பூர்த்தியாக வெட்டப்படவில்லையென்றும், அசோகன் கால்வாய்களை வெட்டிச் சில சீப்புகளையும் அமைத்தானென்றும் இங்குக் கூறப்படுகின்றன. அசோகன் இப்பிரதேசத்தில் துஷாஸ்பன் என்ற யவன அரசனைத் தனது பிரதிநிதியாக வைத்து இக்காரியங்களைச் செய்து முடித்தானாம்.[1]

  1. * எபிக்ராபியா இந்திக்கா (Epigraphia Indica) - Vol. viii. பக்கம், 36.