பக்கம்:அசோகர் கதைகள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை இரண்டு

27

அவன் திண்ணமாக நம்பினான். அந்த வாசகம் அசோகர் தாமாகச் சேர்த்து எழுதச் சொன்னதாக இருக்கவேண்டும் என்றுதான் அவன் எண்ணினான்

புத்த பெருமானின் புதுக் கருத்துக்களை யெல்லாம் ஏற்றுக்கொண்ட இந்த மாமன்னர் ஏன் இந்தப் பழங் கருத்தையும் அவற்றோடு ஒப்ப வைத்துப் பரப்ப முன்வர வேண்டும் என்று அவன் மனம் கேள்வி தொடுத்தது.

இவ்வளவு சிந்தனைக்கு இலக்காகியும் அவன் மனம் ஒப்புக் கொள்ள மறுத்த அந்த வாசகம் இதுதான்.

மூத்தோரைப் போற்று

உயர்ந்தோரைப் போற்று என்றோ, பெரியோரைப் போற்று என்றோ, அந்த வாசகம் அமைந்திருந்தால், கல்வியால் உயர்ந்தோரைப் போற்று என்றோ, அறிவிற் பெரியோரைப் போற்று என்றோ, அனுபவத்தால் முதிர்ந்தோரைப் போற்று என்றே பொருளுரைத்துக் கொள்ளலாம்; மன அமைதி பெறலாம்! ஆனால் மூத்தோரைப் போற்று என்றால் வயதில் பெரியவர்களைப் போற்ற வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன பொருள் கொள்ள முடியும்?

அந்த வாசகத்தைப் பார்க்கப் பார்க்க இளைஞனுக்கு ஒருவிதமான அருவருப்பு வளர்ந்தது. மாமன்னர் அசோகர் சற்றும் பொருத்தமற்ற இந்த வாசகத்தையும் மற்ற வாசகங்களோடு இணையாக ஏன் எழுதினர் என்றுகூட நினைத்தான். அந்த வாசகத்தைப் படித்ததால் ஏற்பட்ட அதிருப்தி அவனுடைய முகத்திலே வெளிப்பட்டது மட்டு மல்லாமல் வாய்ச் சொற்களாகவும் வெளிப்பட்டது. "சற்றும் பொருத்தமற்ற வாசகம்! மூடத்தனமான வாசகம்!" என்று வாய்விட்டுத் தனக்குள் பேசிக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/29&oldid=734150" இலிருந்து மீள்விக்கப்பட்டது