இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அணியறுபது 1/5
சிறுமைக்கு அடையாளம் செருக்கு. செல்வரிடம் இது இயல்பாகச் சேரும். அவ்வாறு சேராமல் செய்து கொள்ளின் அவர்க்கு மிக்க நன்மையாம்.
இடையில் கோவணமும் இன்றி இங்கு உதித்தோம்; அவ்வாறே கடையினில்; வெறுங்கை யோடும. கழிகுவம்; நடுவில் சேரும் உடைமையால் பெருமை என்னே? ஊர்க்கெலாம் பொதி சுமக்கும் விடைதருக் குற்ற தென்ன வீண்செருக்கு உற்றாய் நெஞ்சே! (நீதி நூல்) உள்ளம் செருக்கடைய நேர்ந்த போது இவ்வாறு சிந்தித்து அதனை எவ்வழியும் ஒழித்து ஒழுக வேண்டும்.
46. ஊருக் கணிப்பெரியோர் உண்மையே;ஊறிவரும் நீருக் கணியினிய நீர்மையே- பாருக்குச் செல்வ வளங்கள் சிறந்த அணி; செல்வர்க்கு நல்லீகையே அணியாம் நன்கு.
(ச.சு)இ-ள். பெரியோர் இருப்பதே ஊருக்கு அழகு; இனிய நீர்மையே நீருக்கு அழகு செல்வ வளங்கள் செழித்திருப்பதே நாட்டுக்கு அழகு நல்ல ஈகையே செல்வர்க்கு அழகு என்க.
ஊருக்கும் நீருக்கும் பாருக்கும் செல்வர்க்கும் உரிய உயர்வுகள் இங்கே தெரிய வந்தன. இனிய சுவையால் நீரும், அரிய பெரியோரால் ஊரும், செல்வ நிறைவுகளால் நிலமும், வள்ளன்மையால் செல்வமும் புகழும் சிறந்து திகழுகின்றன.