உ
அனியறுபது
கடவுள் வாழ்த்து.
ஆழிசூழ் ஞாலம் அணிபெற் றினிதோங்க ஊழி முதல்வன் உளமகிழ-வாழியென வேதங்கள் ஏத்த விரைமயிலூர் வேளமல பாதங்கள் எம்முடைய பற்று. (1) இதன் பொருள்
ஆழ்ந்த கடல் சூழ்ந்த இவ்வுலகம் ஒளி பெற்று எழில் மிகுந்து விளங்க, ஊழி முதல்வனை சிவ பரம்பொருள் உளம் உவந்து மகிழ, இருக்கு முதலிய வேதங்கள் வியந்து புகழ்ந்து போற்ற, அதிசய வேகம் உடைய அழகிய நீல மயிலை வான வீதியில் ஞான ஒளிவீச மான வீரமா ஊர்ந்து அருளிய செவ்வேளின் திருவடி மலர்களே எனது உள்ளம் பற்றி யுள்ள உறுதித் துணைகள் என்க.
உலகப் பற்று ஒழியவும் உண்மைப் பற்று உறுதியாய்த் தெளியவும் உரிய வழி தெரிய வந்தது. பற்ற உரியவனைப் பற்றுவதே உற்ற பயனும்.
ஓங்க, மகிழ, ஏத்த, ஊர்கின்ற வேள் என்க. உலகமும் பரமனும் மறைகளும் மகிழ்ச்சி மீதுர்ந்து வர மயில் மீது ஊர்ந்து வந்துள்ள அரிய பெரிய அமலனை உரிமையா ஈங்கு அறிய நேர்ந்துள்ளோம்.