பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

167

இறுகும்வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில்

ஏகநாயகா!லோகநாயகா!இமையவர் பெருமாளே!
                             (திருப்புகழ், 107) 

அருணகிரிநாதருடைய ஆன்ம அனுபவ நிலையை இங்கே கூர்ந்து ஒர்ந்து உவந்து கொள்கின்றோம்.

வினைத் தொடர்புகள் அற்று உயிர் பரிசுத்த நிலையை அடைந்தபோது பரமபதியோடு தோய்ந்து பேரானந்தங்களை நுகர்ந்து மகிழ்ந்து ஒன்றாய் உறைந்திருக்கும் என்பதை இதனால் உணர்ந்து உண்மை நிலைகளைத் தெளிந்து கொள்கிறோம்.

பாசம் நீங்கிய அளவே பசு பதியுடன் கலந்து களிக்கின்றது. பசுபதி எனப் பரமேசுரன் பேர் பெற்றுள்ள பெற்றியை உற்றுணரின் உயிரின் உயர் பேரின்ப நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். உள்ளம் தூய்மையாய் உணர்வு தெளிந்துவரின் எல்லா இன்பங்களும் எளிதே எய்த வரும்.

சீவன்எனச் சிவன் என்ன வேறில்லை; சீவனார் சிவனாரை அறிகிலர்; சீவனார் சிவனாரை அறிந்தபின் சீவனுர் சிவனாயிட் டிருப்பரே.

                        (திருமந்திரம் 2017)

இந்த மந்திர மொழியைச் சிந்தனை செய்க.

         அணியறுபது முற்றுப் பெற்றது.