பக்கம்:அணியும் மணியும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

அவ்வுணர்வு ஆழமாகப் பதிந்து விடுகிறது. மேலும் இன்பம் இல்லையென்றாலும் துன்பம் வந்தால் அதனை அமைதியாக ஏற்றுக்கொண்டிருக்க வியலாது. அதனை ஒழிக்கப் பெருமுயற்சி நடைபெறுவது இயல்பாகிறது. அதனால் இன்ப உணர்வை விடத் துன்ப உணர்வு யாவர்க்கும் பொதுமையாகிறது; ஆழமாகப் பதிகிறது; மக்கள் உள்ளத்தைத் தாக்க வல்லதாகிறது. காவியத்திலும்; மற்றைய கலைத்துறையிலும் மாந்தர் உள்ளத்தைக் கவரக்கூடிய உணர்வுகளில் அவலச்சுவையே ஆழ்ந்த உணர்வைத் தெரிவிப்பதாக அமைகிறது. கோவலனின் திருமணச் செய்தியைவிட அவன் கொலையுண்ட செய்தியே அக் காவியத்தின் அடிப்படை உணர்வு என்று கூறலாம். கோவலன் காதலில் பாராட்டும் பாராட்டுரையைவிட அவன் சாதலுக்காக அவள் அழும் அழுகை உரையே ஆழ்ந்த உணர்வு பெற்றுள்ளது.

அன்பனை இழந்தேன் யான் அவலங் கொண்டு அழிவலோ

என்று கேட்பது உள்ளத்தைத் துன்பத்தில் ஆழ்த்துகிறது.

இன்ப வாழ்வில் தொடங்கி இன்பத்தில் முடியும் இன்பியல் கதைகள் பொதுவாக இடையில் துன்பம் நிறைந்த காட்சிகளைப் பெற்று அவற்றைப் போக்கும் நிகழ்ச்சிகளைப் பெரும் பகுதியாகக் கொண்டு விளங்குகின்றன. துன்பியல் கதைகள் இறுதியில் துன்பத்தில் முடிந்து துயரத்தில் ஆழ்த்திவிடுகின்றன. நாடகங்களின் போராட்டப் பகுதிகளும் துன்பத்தைப் போக்கும் பகுதியையே கொண்டு விளங்குகின்றன. துன்பம் வாழ்க்கையைப் பாழ்படுத்துகிறது; அஃது இலக்கியத்தில் சுவையும் ஆழமும் தந்து அதனை அழகு செய்கிறது.

இந்த அழுகை உணர்வு தோன்றுவதற்கு வாழ்வில் ஏற்படும் துன்ப நிகழ்ச்சிகளே காரணமாகின்றன. வாழ்க்கை சுமையாக ஆகும்பொழுது அழுகை வெளிப்பட்டு அதனை ஆற்ற முற்படுகிறது. இத்துன்ப நிகழ்ச்சிகளுள் வாழ்க்கைக்குத் துணையாக உள்ளவரைப் பிரிதல் பெரிதாகும். உயர்ந்த