பக்கம்:அணியும் மணியும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

வாழ்வில் புதுவழி கூறுவோர் ஒரு சிலர் கலையை உயர்த்திப் பேசுவர்; ஒரு சிலர் தொழிலையே உயர்த்திப் பேசுவர். பாரதியார் இரண்டையும் ஒத்த நிலையில் வைத்து அவற்றை வளர்க்க வேண்டிய அடிப்படையை உணர்த்துகிறார். காவியம் செய்வதும், காடு வளர்த்தலும், கலை வளர்த்தலும், கொல்லர் உலைக்களம் வளர்த்தலும், ஓவியம் வரைதலும், ஊசி செய்தலும் ஒத்த மதிப்புடைய தொழில்களாகக் கொள்ள வேண்டுமென்பார் இவற்றை அடுத்தடுத்து வைத்துக் கூறுகின்றார். இவ்வாறு தொழில்களில் வேறுபாடு பாராட்டாமல் உலகத்துத் தொழிலனைத்தையும் நம் நாட்டில் செய்தால்தான் நாடு விழிப்படைந்து உயர்வு அடைய முடியும் என வற்புறுத்துகின்றார்.

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
    கலைவளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
    உலகத்தொழிலனைத்தும்உவந்து செய்வோம்

என்பது அவர்தம் அறிவுரையாகும்.

நாடு வாழத் தொழில்வளம் சிறக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் கவிஞர், மொழி வாழக் கலைவளம் சிறக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றார். பிற நாட்டுக் கலைகளைத் தமிழ் மொழியில் அமைப்பதோடு இறவாத புகழுடைய புது நூல்களைத் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் என்று வற்புறுத்துகின்றார்.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும்-கலைச்
     செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

என்று அறைகூவி அறிவுறுத்துகின்றார்.