பக்கம்:அணியும் மணியும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கருதிச் சிறப்பிக்கப்பட்ட திருக்குறள் என்ற பெயரே நிலைத்து விட்டது.

சொற்களைச் சொல்லும் பொழுது மக்கள் பேச்சு மொழியின் போக்கை ஒட்டிச் சுருங்கக்கூறி விளங்க வைப்பது போலவே, மக்கள் பேசும் மரபை ஒட்டியே உவமைகளும் பிற அணிகளும் அமைந்துள்ளன. 'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு' என்ற பேச்சு மரபை ஒட்டியே,

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின – 475

என்ற குறள் அமைந்திருக்கிறது.

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெருஉம் புலிதாக் குறின் – 599

என்பதும் இதைப் போன்ற அமைப்பை உடையதாகும். பொருளை விடுத்து உவமையை மட்டும் அமைப்பது இவற்றில் காணும் சிறப்பியல்பாகும். பொருளைக் கூறாது விடுவதால் சொற் சுருங்கியிருத்தல் இவ்வமைப்பின் தனியழகாகும். இவ்வாறு, உவமையை மட்டும் சொல்லிப் பொருளோடு தொடர்பு படுத்தாமல் விடுவதால் மற்றொரு சிறந்த நன்மையும் உண்டாகிறது. ஒரு குறிப்பிட்ட பொருளோடு மட்டும் உவமை தொடர்புபெறாமல் யாண்டும் பொருந்தத் தக்க வகையில் அமைகிறது. மேலே குறிப்பிட்ட குறள்களுள் முறையே எடுத்துக்கொண்ட பொருளாகிய வலியறிதல், ஊக்கமுடைமை என்பவை அரசியற்கன்றி ஏனைய சூழ்நிலைக்கும் பொருந்துவனவாக அமைகின்றன. இதனைப் பிறிதுமொழிதல் அணி என்று அணி நூலார் பாராட்டுவர்.

இவர் சொற்றிறனின் மற்றொரு சிறப்பியல்பு. உவமையும் பொருளும் கூறி இடையே உவம உருபு கொடாதிருத்தலாகும்.