20
அவள் நிறைந்த பண்பும், அன்பின் உயர்வும், கற்பின் சிறப்பும் பெற்றவளாக இருந்தபோதும், அவளுடைய நலத்திற்கு இடையூறு உண்டானபோது, ஆழ்ந்த பேரன்பும், கணவன்பாற் கொண்ட பெருமதிப்பும் மிகவிரைவில் மாறிவிடும் இயல்பை அழகாகப் படிப்படியே காட்டிச் செல்கிறார்.
அவள் உள்ளத்தில் மெல்லக் களங்கத்தைப் புகுத்துகிறாள் கூனி.
ஆழ்ந்தபேர் அன்பினாள் அனைய கூறலும்
சூழ்ந்ததீவினைநிகர் கூனி சொல்லுவாள்
வீழ்ந்தது நின்னலந் திருவும் வீழ்ந்தது
– அயோத்தியா கண்டம், 47
என்று கூனி கூறுமாற்றைக் கம்பர் காட்டுகிறார். எதைச் சொன்னால் மனிதமனம் மிகவிரைவில் மாறிவிடும் என்பதை உணர்ந்த மந்தரை, 'வீழ்ந்தது நின்னலம் திருவும் வீழ்ந்தது' என்று முதலில் மனத்தில் அதிர்ச்சியை உண்டாக்குகிறாள். உலகியல்பையும், மாந்தரின் உள்ளத்தையும் நன்றாக அறிந்த மந்தரை மிக எளிய கருவியைக் கொண்டு அவள் நிறை மனத்தை மிகவிரைவில் குறையுளதாக ஆக்கிவிடுகிறாள்.
'இராமன் கோமுடி சூடுவன் நாளை வாழ்விது' என்று சுட்டிக்காட்டுகின்றாள். அப்பொழுதும் கைகேயியின் மனம் மாறுபடவில்லை. இராமன் வாழ்வு பெறுவதற்கு அவள் அழுக்காறோ அவலமோ கொள்ளவில்லை. அதற்கு மாறாக மனத்தில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறாள். 'நாயக மனையதோர் மாலையை' அவளுக்கு, அச்செய்தியைச் சொன்னதற்காகப் பரிசாக நல்குகிறாள்.
பிறர் நல்வாழ்வு கொள்வதால் அழுக்காறு கொள்பவரும் உலகில் உள்ளனர். அத்தகைய பண்பு கைகேயியினிடத்தில்