32
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கூனி தன்னோடு
மணமனை புக்கு மாதவி தன்னோடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதலறியா விருப்பின னாயினன்
என்று கூறுகின்றார். வடுநீங்கு சிறப்பினையுடைய தன் மனைவியின் இல்லத்தை அறவே மறந்துவிட்டான் என்று கூறுகிறார். அவள் ஒருத்தி இவன் வருகைக்காகக் காத்துக் கிடப்பாளே என்ற நிலையை மறந்து, மாதவியை விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் என்று கூறுகின்றார். மாதவியின் மணமனை புகுந்தவன் கண்ணகியின் மனையகத்தை மறந்துவிட்டான் என்று இருவேறு காட்சிகளை ஒருங்கு வைத்துக் காட்டுகின்றார்.
இதைப் போலவே அந்திமாலையைச் சிறப்பித்துக் கூறும்பொழுது நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்தில் ஆர்வ நெஞ்சத்தளாய்க் கோவலனோடு உடன் அமர்ந்து கோலங்கொண்ட மாதவியின் மகிழ்ச்சியை விவரிக்கும் பொழுது, கையறு நெஞ்சத்துக் கண்ணகியின் கண்ணீரை அவரால் காட்டாமல் இருக்க இயலவில்லை. கண்ணகி அணியிழந்து கோலமிழந்து தனிமையுற்றாள் என்ற செய்தியையும் உடன் சேர்த்துக் கூறுகின்றார். ‘ஆர்வ நெஞ்சமொடு கோவலற் கெதிரிக் கோலங்கொண்ட மாதவி’யின் நிலையைச் சொல்லும் அதே தொடர்ச்சியில்,
மங்கல் வணியிற் பிறிதணி மகிழாள்
என்றும், “அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிந்தது” என்றும், “செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறந்தது” என்றும் கூறி,