பக்கம்:அணியும் மணியும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அவள் அழுது அரற்றும் துன்பக் குரல் அவன் செவிகளில் விழவில்லை. கண்ணகியைச் சந்தித்து, ‘மாசறு பொன்னே!’ என்றும், ‘பொன்னே! கொடியே!’ என்றும் முன்னால் புகன்று பாராட்டிய அந்த வாய், இப்பொழுது மூடிக் கிடக்கிறது என்றும், அவனால் பாராட்டப் பெற்ற அதே செம்பொற்கொடியனையாள் அவன் கண்முன் நின்றும் அச் செம்பொன்கொடியாளின் அழகை அவன் கண்கள் அப்பொழுது காணவில்லையே என்றும் அறிவுறுத்துவார் போன்று, செம்பொன் கொடியனையாள் என்ற தொடரால் கண்ணகியைக் குறிப்பிடுகின்றார். கொடியே என்று முன்னர் அவனால் பாராட்டப் பெற்ற கண்ணகி இப்பொழுது கொழு கொம்பின்றித் துவள்கின்றாள்; இனித் தழைப்பதற்கு வழியில்லை என்பார், ‘கொடியனையாள்’ என்ற குறிப்பால் உணர்த்துகிறார். கொழு கொம்பு இழந்த கொடிபோன்று கொழுநனையிழந்து அவள் உள்ளம் அழிகின்ற காட்சியை இத்தொடரால் குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது.

அன்று காலை நிகழ்ந்த இன்ப நிகழ்ச்சிகளும் மாலையில் நேர்ந்த துன்ப அதிர்ச்சியும் இளங்கோவின் நினைவுக்கு வருகின்றன. அன்றைய காலைப் பொழுதில் மாலை தவழும் மார்பால் அவளை அவன் தழுவிக் கொண்டதும், அவன் தலை மாலையில் இருந்த மலரை வாங்கித் தன் வார்குழல் மேல் அவள் சூட்டிக்கொண்டதும், அதே மாலைப்பொழுதில் மண்ணில் கிடந்த அவன் உடலையும் மாலைபுரண்ட மார்பில் குருதிவடியும் நிலையையும் அவள் காணுவதும் ஆக, இருவேறு நிலைகளை ஒருங்கு வைத்துக் காட்டி இன்பதுன்பத்தை அடுத்தடுத்து வைத்துத் துன்ப நிகழ்ச்சியால் ஏற்பட்ட துயரத்தை மிகுதிப்படுத்திக் காட்டுகின்றார்.

வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல்மேற்
கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப்

புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்