49
மன்னர் விழித்தா மரையூத்த மண்டபத்தே
பொன்னின் மடப்பாவை போய்ப்புக்கள் - மின்னிறத்துச்
செய்யதாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப்
பொய்கைவாய்ப் போவதே போன்று
- 138
அன்னப் பறவை தனக்கேயுரிய தாமரைப் பொய்கையில் அஞ்சாமல் மென்னடை நடந்து செல்வது போல நடந்து சென்ற அவள் நடையழகு அரசர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது என்பதை ‘மன்னர் விழித்தாமரை பூத்த மண்டபம்’ என்ற தொடரில் அமைத்துக் காட்டியிருப்பது போற்றற்குரியது.
மங்கையொருத்தியின் செங்கையை மலர் ஒன்றுக்கு உவமைப்படுத்துவதோடு அமையாமல், மலரென மருளும் வண்டு அவளைச் சுற்றுவதாக அமைக்கும் காட்சியில் கற்பனைச் சிறப்பும் நகைச்சுவையும் அமைந்திருக்கின்றன. நளன் திருமணமான பிறகு தமயந்தியோடு நகரில் உள்ள சோலைவளம் காண மாலைவேளை செல்கிறான். அங்கே அவன் பல அழகிய காட்சிகளை அவளுக்குக் காட்டிச் செல்கிறான். அக் காட்சிகளில் ஒன்றாக இஃது அமைகிறது. மங்கையொருத்தி அங்கு மலர் கொய்து கொண்டிருக்கிறாள். அவள் ஒளிபெற்ற முகத்தை வண்டு ஒன்று கண்டு, அவ்வழகு பொலியும் முகத்தை வண்ணமிகு தாமரையெனக் கருதி முகத்தில் மொய்க்கத் தொடங்குகிறது. அவள் அவ்வண்டைத் தன் முகத்தில் அணுகாவண்ணம் தன் கை விரலால் விலக்குகிறாள். அக் கைவிரல்களைக் காந்தள் மலரெனக் கருதி அவளை விடாமல் மீண்டும் அவள் கரங்களைச் சுற்றி வட்டமிடுகின்றது. அவள் அஞ்சி நடுங்கி வியர்க்கிறாள். இஃது அவர் அமைக்கும் கற்பனைச் சித்திரம்.
காந்தள் போன்றது கைவிரல் என்றும், தாமரை போன்றது முகம் என்றும் கூறுவதோடமையாமல், அவற்றை மலர்கள் என