பக்கம்:அணியும் மணியும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

குழப்பத்தையும் நெஞ்சில் வெடிக்கும் எரிமலை போன்ற பிரிவுத் துன்பத்தையும் சொல்லும் பொழுது, புலவரின் கற்பனை மிகவும் உயர்ந்துவிடுகிறது என்று கூறலாம். பேசாத நண்டோடும் கேளாத கடலோடும் அவனைப் பேச வைக்கின்றார்.

கடற்கரையோரமாக நளன் சென்று கொண்டிருக்கிறான். கரையோரத்தில் நண்டுகள் அவன் வருவதைக் கண்டு அஞ்சி ஓடித் தம் வளையில் ஒளிந்துகொள்கின்றன. அவற்றைப் பார்த்து, ‘நண்டே நீ ஏன் ஒளிகின்றாய்? காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட பாதகனைப் பார்க்கக் கூடாது என்பதற்காகவா ஓடி ஒளிகிறாய்? பசையற்ற நெஞ்சோடு பரிதவிக்க விட்டுச் சென்ற மாபாதகன் என்றெண்ணி என்னைப் பார்க்க வெறுக்கிறாயோ?” என்று கூறும் கற்பனை, இலக்கியத்தில் அழியா இடம் பெறுகிறது.

காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ-ஓடி
ஒளிக்கின்ற தென்னோ உரை? —354

“நண்டே என்னைக் கண்டு ஓடி ஒளிப்பது ஏன்?” என்று மிக உருக்கமாகக் கேட்கிறான். தன் செயலின் கொடுமையைக் “காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட” என்ற தொடரில் மெல்ல மெல்ல மிகுவித்துச் சொல்வதைக் காண்கிறோம்.

கரையில் நண்டோடு பேசுவதாகக் கூறும் கற்பனை அதனோடு அமையவில்லை. கடலை நோக்கித் திரும்பிப் பார்க்கிறான். கடலின் அலைகள் எழுந்து விழுந்து புரண்டு உருண்டு ஓவென ஒலித்து அலைத்துச் செல்லும் காட்சியைக் காண்கிறான். தன் உடல் நீலநிறம் பெற்று இருப்பதைப் போலக் கடல் நீரிலும் நீலநிறம் இருப்பதைக் காண்கிறான். “நீயும் என்னைப் போலத் தீயவர்க்கு உதவிசெய்து நிறம்