பக்கம்:அணியும் மணியும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

தந்தைக்கும் என்னுடைய தந்தைக்கும் இதற்குமுன் எந்த உறவும் இருந்ததில்லை. நீயும் நானும் முன் உறவு கொண்டவர்கள் அல்லர். எனினும் நம்முடைய உள்ளம் அன்பால் ஒன்றுபட்டுப் பிணைக்கப்பட்டுள்ளன. வானத்திலிருந்து வையகத்தில் விழும் மழைத்துளிகள் செம்மண்ணில் கலந்து செங்குழம்பாகிவிட்டால், அவற்றைத் தனித்துப் பிரித்துக் காண முடியாதவாறு போல இனி ஒன்றுபட்ட நம் உள்ளத்தைப் பிரிக்கமுடியாது; அன்புடை நெஞ்சம் தாமாகக் கலந்துவிட்டன” என்று கூறுகிறான்.

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுத்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங் கலந்தனவே

- குறுந்தொகை - 40

என்று தம் அன்புடை நெஞ்சம் ஒன்றுபட்ட செய்தியைப் பண்பு குன்றாமல் பாடுகிறான்.

மற்றொரு குறுந்தொகைப் பாடல், தலைவன் தலைவியர் வாழ்வில் காணும் அன்புடை நெஞ்சத்தைக் காட்டுவதோடு அதனை விளக்க விலங்குகளின் வாழ்வில் காணும் அன்புடை நெஞ்சத்தையும் உடன் சுட்டுகிறது. ஒரு தோழி தலைவன் வரும் வழியருமையை அவனுக்குக் கூறி அக்கொடிய வழியில் அவன் வருவதால் தலைவி நெஞ்சம் துடிப்பாள் என்ற செய்தியை அவனுக்குத் தெரிவிக்கிறாள். அதை விளக்க, அவன் நாட்டில் உள்ள பெண் குரங்கின் அன்பு உள்ளத்தையும் அதன் செயலையும் சேர்த்துக் கூறுகிறாள்.

ஆண் குரங்கு இறந்துவிட்டது என்ற செய்தியைப் பெண்குரங்கு அறிகிறது. இனித் தனித்து வாழ்ந்து கைம்மை நோன்பு நோற்க விரும்பாத மந்தி தன் குட்டிகளைத் தன்