பக்கம்:அணியும் மணியும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

முள் போன்ற சிறு எயிறு தோன்ற அவள் முகத்தில் புன்முறுவல் தோன்ற வேண்டும் என்று அத்தலைவன் எதிர்பார்க்கின்றான். துகில்தலைப்பால் நெற்றியில் தோன்றும் சிறு வியர்வைகளைத் துடைத்துக் கொண்டு, அந்த அட்டில் இடத்தைவிட்டு அகலாமல் அவனோடு புலந்து வெறுத்து இருக்கிறாள். அத்தகைய நிலையில் அவள் மனம் சிறிது வேறு வகையாகத் திரும்பினால் நலமாக இருக்குமேயென்று கருதுகிறான். அந்த வீடு எருமையும் அதன் கன்றும் தூண்தோறும் கட்டப்பட்டு அழகாக விளங்குகிறது. அந்த இல்லில் வாளை மீனை வகைப்படுத்தி அட்டில் தொழிலில் ஈடுபடும் தலைவியின் நிலை இவ்வாறு வருணிக்கப் பட்டிருக்கிறது. அவள் அன்புடை நெஞ்சத்தில் ஏற்பட்டிருக்கும் சிறு வெறுப்பை அவன் உள்ளம் மாற்ற அவாவும் நிலைமையை இப்பாடல் காட்டுகிறது.

ஒருவரை ஒருவர் பிரிவதால் ஏற்படும் ஆற்றாமையால் அல்லலுறும் நெஞ்சின் துயரைச் சங்கத்துச் சான்றோர் காட்டுவதில் வல்லவராக விளங்கினர் என்பதைப் பாலைத் திணையில் வரும் பாடல்கள் அறிவுறுத்தும். தலைவன் பொருள் காரணமாகவோ போர்வினை காரணமாகவோ பிரியும் பிரிவுக்குப் பாலை என்றும், அவ் வொழுகலாற்றைப் பாலைத் திணை என்றும் கூறுவர். இப் பாலைத்திணைப் பாடல்கள் அன்புடை நெஞ்சங்கள் பிரிவால் உறும் அல்லலை அழகுபடக் கூறுகின்றன.

செய்வினை முடிக்கச் சேண் தூரஞ் சென்றுவிட்ட தலைவன் காதல்நெஞ்சு ஒருபுறம், கடமை உணர்வு ஒருபுறம் என இவ்விரு நிலைகளால் அலைக்கப்பட்டுக் கரைகாண முடியாமல் திகைக்கின்றான். நெஞ்சு அவளிடத்தில் கொண்ட விழைவால், விரைவில் வீடுதிரும்ப வேண்டும் என்ற வேட்கையை மிகுதிப்படுத்துகின்றது. அவனுடைய அறிவு கடமை பெரிது என்றும், அதனால் செய்வினை முடித்துவிட்டு