பக்கம்:அணியும் மணியும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

பற்றற்று வாழ்வது என்பது ஆண்களுக்கு மட்டும் உணர்த்தும் நீதியன்று என்பதை உணர்த்தத் தான் பெண்ணொருத்தியின் வாழ்வில் துறவுள்ளம் வளருமாற்றைக் காட்டி, அச் செய்தியையே ஒரு பெருங்காப்பியமாக அமைத்திருக்கக் காண்கிறோம்.

வாழ்க்கையில் மிகவும் நொந்துவிட்டாலும், தான் வாழும் சூழ்நிலை கெட்டுவிட்டாலும், பற்றற்ற உள்ளம் தான் அவற்றைச் சீர்திருத்த முடியும்; பற்றற்ற உள்ளத்தில் வாழ்வின் உண்மைகள் தெளிவாக விளங்கும் எனக் கூறலாம். மனித சமுதாயமே திருந்தவேண்டுமென்றால் ஆளுக்கு ஒரு நீதி, சமயத்துக்கு ஏற்ற செயல், இனத்துக்கு எனத் தனி நன்மை, இவை நீங்க வேண்டும்; அவ்வாறு நீங்கத் துறவுள்ளம் தவிரத் தூயமருந்து இல்லை என்று கூறிவிடலாம். துறவு என்றால் வாழ்க்கையை வெறுப்பது அன்று என்பதையும், அருளுணர்வோடு உலகத்து வாழ்வை நடத்துவது என்பதையும் காட்டவே இந்நூல் எழுந்தது எனக் கூறலாம்.

மணிமேகலை பிறந்த குலம் மிக இழிந்த ஒன்றாகக் கருதப்பட்டது. உயிரின் சிறந்த பண்பாகிய அன்பு செய்தல் என்ற தன்மையை இழப்பதுவே அவர்கள் வாழ்வின் நெறியாக அமைந்திருந்தது என்று தெரிகிறது. உலகத்து உயிர்களின் செயலெல்லாம் அன்பு செய்தல் என்றிருக்க, இவர்கள் ஒழுக்கம் மட்டும் அன்பு இன்றி வாழ்வது என்ற அளவுக்கு அவர்கள் உள்ளம் மிகவும் தாழ்ந்து விட்டது என்று கூறலாம். மணிமேகலையின் பாட்டியாகிய சித்திராபதி அக்காலத்துப் பரத்தையரின் பொதுநெறியையும் மனவியல்பையும் வெளிப்படுத்துவதிலிருந்து அவர்கள் பசையற்ற நெஞ்சை அறிய முடிகிறது. மலரில் உள்ள மனத்தை நுகர்ந்து மணம் இழந்த மலரை விட்டு நீங்கும் வண்டைப் போலப் பொருளுள்வழிப் பிறரோடு பொருந்திப் பொருளற்றால் தொடர்பும் அற்று வேறொருவரை நோக்கி வாழ்வது அவர்கள் வாழ்வியில் என்பதாக உணர்த்துகிறாள்.