பக்கம்:அணியும் மணியும்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. சில சொற்கள்


‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’ என்று பாரதியார் தமிழ்ச் சொல்லின் உயர்வைப் பாராட்டினார். தமிழைச் சொல்லுவதில் இன்பமும், அதைக் கேட்பதில் இனிமையும், அச்சொல்லைச் சொல்லும் திறனில் கலையமைப்பும் உண்டாகின்றன என்றால், தமிழ்ச் சொல்லின் பெருமையைச் சொல்லி முடியாது.

சொல்லத் தெரிந்தவர்கள் எதைச் சொன்னாலும் அதில் இன்பத்தைக் காண முடிகிறது. அச் சொல்லுக்கு ஆற்றலும், ஆற்றலால் செயலும் பிறக்கின்றன. உள்ளத்தில் ஊற்றெடுக்கும் கவிப்பெருக்கும், கற்பனையில் வடித்தெடுக்கும் கதையமைப்பும் சொல்லுவோனின் சொற்றிறனால் சிறப்புப் பெறுகின்றன. கம்பர், இளங்கோ, வள்ளுவர் போன்ற ஆன்ற புலவர்களின் ஆழ்ந்த கவிதைகளும் சொல்லும் திறனால் வெல்லும் வாழ்வைப்பெற்று, அழியாப்பெருஞ் செல்வமாக நிலைபெற்றிருக்கின்றன. ‘பொழுது போக்குக்கு’ என ஒழிந்த நேரங்களில் படித்து இன்புறும் பல்வகைத் தொடர்கதைகளும் நடித்து இன்புறும் நாடக உரையாடல்களும் சொல்லும் திறனாலேயே உள்ளத்தைக் கவர்கின்றன. தேர்ந்த சொல்லால் ஒர்ந்த பொருள்கள் இழுமென் ஓசையும், விழுமிய கருத்துங் கொண்டு விளங்கும் பொழுது அவை கற்போரின் உள்ளத்தை ஈர்க்கும் கவின்மிகு இலக்கியங்கள் ஆகின்றன.

வள்ளுவர் வாய்மொழியும் சொல்லும் திறன்படச் சொல்லப்படவில்லை என்றால் அஃது அறத்தை வற்புறுத்தும்