88
பொய்யே பொருளுரையாம்; முன்னே
கொடுத்துண்டல் புரிமின் கண்டீர்
- கேமசரி. 142
என வழிப்போக்கனுக்கு உணர்த்துமாறு போல இச்செய்தியை உணர்த்துகின்றார். அவள் இளமை மிக்கவள் என்பதைக் காட்டக் ‘கயற் கண்ணாள்’ என்ற தொடரால் அவளைக் குறிப்பிடுகின்றார்.
இன்னும் இதைப்போன்ற பல அறங்களையும் கருத்துகளையும் ஆங்காங்குத் தக்க சூழ்நிலையில் அமைத்துக் கவிதையில் தம் கொள்கைகளைப் புகுத்தி விடுகின்றார். இளமையும், செல்வமும், யாக்கையும் நில்லா என்ற நிலையாமையை உணர்த்தும் கருத்துகளைப் பல இடங்களில் உணர்த்திச் செல்கிறார்.
அமைச்சனான கட்டியங்காரன் அரசனான சச்சந்தன் மீது போர் தொடுத்துவிட்டான் என்ற செய்தியை உணர்ந்த சச்சந்தன், போர்க்குச் செல்வதற்கு முன்னால் மயிலனைய தன் மனைவியை மயிலூர்தியில் ஏறிச்செல்லுமாறு பணிக்கின்றான். அதைக் கேட்டு அவள் அல்லலுற்று அழுங்கும் நிலையில், வாழ்வின் நிலையாமையை உணர்த்திச் சாதலும் பிறத்தலும் வினையின் பயனாகும் என்று அறிவிக்கிறான். ஈண்டு ஆசிரியர். வாழ்வைப் பற்றி அவர் கொண்டுள்ள நிலையாமைக் கருத்துகளைப் புகுத்துவதைக் காண்கின்றோம்.
சாதலும் பிறத்தல்தானும் தம்வினைப் பயத்தின் ஆகும்;
ஆதலும் அழிவும் எல்லாம் அவைபொருட்கு இயல்பு கண்டாய்;
நோதலும் பரிவும் எல்லாம் நுண்ணுணர்வு இன்மையன்றே
- 269
என்று வினையின் இயல்பையும், ஆதலும் அழிதலும் ஆகிய பொருளின் இயல்பையும் உணர்த்தி நிலையாமைக் கருத்தை மெல்லப் புகுத்துகின்றார்.