பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/301

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதிர்காலத்தில் அணுவாற்றல்

285


நினைத்திருந்ததைவிட இக் கால அளவு மிகவும் அதிகமே - இந்தச் சோதனை முடிவைப் பயன்படுத்தி மருத்துவ நிபுணர்கள் இதய நோயாளிகளுக்குத் துல்லியமான அளவில் மருந்து கொடுக்கலாம்.

தீராத நோய்களையும் அணுவாற்றலால் கட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர், எத்தனையோ நோய்கள் வேருடன் அழிக்கப்பெற்று விட்டன. இன்னும் பல நோய்கள் வருங்காலத்தில் இந்த அழிவுப் பட்டியலில் சேர்ந்து விடும்.-- இப்பொழுது நீரிழிவு நோய்[1] கட்டுக்கு அடங்கி விட்டது. இளம்பிள்ளை வாதம்,[2] புற்றுநோய் போன்ற நோய்களின் மீதும் விரைவில் வெற்றி கிட்டும் என்று நம்பலாம். ஸோரையாஸிஸ், [3] எக்ஸிமா[4] போன்ற தோல் நோய்கள் உயிருக்கு விபத்து விளைவிக்கக் கூடியனவாக இராவிடினும், அவை எங்கும் பரந்து காணப்படுபவை. அவற்றை வேருடன்' அழிக்கும் காலம் நெருங்கி வருகின்றது. அணுவாற்றலின் துணைகொண்டு செய்யப்பெறும் மருத்துவத்துறை ஆராய்ச்சி களால் மக்களின் துன்பம் மட்டுப்படுத்தப்பெறும்; அவர்கள் வாழ்நாளும் நீளும்.

மக்கள் நூற்றாண்டு வாழ்வதெப்படி? என்று ஏங்கி யிருந்தகாலம் மலையேறிவிடும் என்பதை மேலேகண்டோம், வயதானவர்களின் எண்ணிக்கை நாளடைவில் பெருகும் என்பது திண்ணம். கிழவர்களிடம் தோன்றும் நோய்களைப் பற்றிய துறையிலும் -ஜெரீயாட்ரிக்ஸ்[5] --அறிவியலறிஞர்கள் ஆராய்ச்சியைத் தொடங்கிவிட்டார்கள். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அவர்களிடம் தோன்றும் நோய்களையும் பீடை களையும் கட்டுப்படுத்தி விடுவார்கள் என்று எதிர்பார்க்க லாம். இன்றைய சூழ்நிலையில் பிறப்பு வீதமும் அதிகரித்து வருகிறது என்பது யாவரும் அறிந்தசெய்தி. ஆகவே, உலகில் மக்கட் பெருக்கம் அதிகரித்து வருகிறது என்பது தெளிவு.


  1. 20 நீரிழிவு நோய் - diabetes.
  2. 21 இளம்பிள்ளை வாதம் - poliomyletis.
  3. 22 ஸோரையாஸிஸ் - psoriasis.
  4. 23 எக்ஸிமா - eczema..
  5. ஜெரீயாட்ரிக்ஸ் - geriatrics, (வயதானவர்களின் தோய்க்கலை)