பக்கம்:அண்ணா நாற்பது.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறிஞர் அண்ணாதுரை வரலாறு


பல்லவப் பேரரசின் நல்ல தலைநகராய்த் திகழ்ந்த காஞ்சிபுரத்தில், 1909-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ஆம் நாள் நடராசன் அவர்கட்கும் பங்காரு அம்மையார்க்கும் அரும்பெறல் மைந்தராய் அறிஞர் அண்ணாதுரை பிறந்தார்; உள்ளுரிலுள்ள பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து பொருளாதாரமும் அரசியலும் பயின்று 1935-ஆம் ஆண்டில் எம். ஏ. (M.A.) பட்டம் பெற்றார்.

அண்ணாதுரை அரசியல் உலகில் கால்வைக்குமுன்னரே, காஞ்சி நகராட்சி அலுவலகத்தில் கணக்கராயும் மற்றும் பள்ளியாசிரியராயும் பணியாற்றியுள்ளார். தம் வாழ்க்கைத் துணைவியாக இராணியம்மையாரை மணந்துகொண்டார்.

அரசியல் உலகில் அடியெடுத்து வைக்கத் தொடங்கிய அண்ணாதுரை, முதல்முதலாக, பெரியார் ஈ. வே. இராமசாமியவர்கள் செல்வாக்குற்றிருந்த நீதிக்கட்சியில் சேர்ந்தார். பின்னர், பெரியார் ஈ.வே.ரா. அவர்களால் 1947-இல் அமைக்கப்பெற்ற திராவிடர் கழகத்தில் சேர்ந்து, அதன் பொதுச் செயலாளராகவும் 'விடுதலை' என்னும் இயக்க நாளிதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 1949-ஆம் ஆண்டு பெரியார் அவர்களோடு கருத்து வேறுபாடு கொண்டு 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்னும் இயக்கம் (கட்சி) தோற்றுவித்தார். அவரைப் பின்பற்றிய நூறாயிரக்கணக்கான தொண்டர்கள் 'அண்ணா அண்ணா' எனப் போற்றி அவரைத் தெய்வமாக வழிபட்டு வரலாயினர். 'அறிஞர்' என்னும் அரும்பெரும் பட்டமும் அவருக்குச் சூட்டப்பட்டது. தலைசிறந்த அரசியல் வல்லுநர் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_நாற்பது.pdf/5&oldid=1030964" இலிருந்து மீள்விக்கப்பட்டது