பக்கம்:அத்தை மகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அந் நிகழ்ச்சி அவன் இதயத்தைத் தொட்டது. இந்த நிலையை ரொம்ப நாள் நீடிக்க விடக்கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு துரிதமாக வாழ்வின் புது மலர்ச்சிக்கு தளம் அமைத்தாக வேண்டும் என்று உள்ளத்தில் உறுதி பூண்டு கிளம்பினான் அவன்.

வண்டியிலேறும் வரை----வண்டி நகரும் வரையிலும்---ஜன்னலின் பின் நின்று வழியனுப்பிய நீர் நிறைந்த நீள் இமைக் கருவிழிகளையும், விடியற்காலச் சந்திரன் போல் வெளிறியிருந்த முகத்தையும் அவன் மறக்கமுடியாது. என்றுமே மறக்க இயலாது.

அந்த உலவும் கவிதை தனக்கு உரியவள்; அவள் என்றும் தன் வாழ்விலே இனிமை கூட்டக் காத்திருப்பவள்; அவளைத் தனித்திருக்க்க விட்டு அவள் வாழ்வையும் தன் வாழ்வையும் உயிரற்றதாய் வறளடிக்கக்கூடாது; காலத் தென்றலின் கிளுகிளுப்போடு இன்ப மலர்ச்சியும் மணமும் பெற்றுத் திகழச் சிலிர்த்து நிற்கும் அரும்பு விரைவிலேயே முழு மலர்ச்சியும் ஏற்று மிளிரத் தன்னால் ஆனதைத் துரிதமாகச் செய்ய வேண்டும்.

பல பல எண்ணினான் அவன்.

என்ன எண்ணி என்ன செய்ய? எண்ணமெல்லாம் பூரணமாக உருப்பெற்றுவிட வசதிகள் இருக்கின்றனவா இந்த வாழ்க்கையிலே ?

இந்தப் பொது நியதி நிறைந்துள்ள உலகில் உழலும் மனிதர்களில் ஒரு மனிதன்தானே சுந்தரமும். அவன் எண்ணியது நிறைவேறாமல் போனதில் வியப்பில்லை அவனுக்கு. ஆற்றமுடியாத இதயவேதனைதான் ஏற்பட்டது காலப்போக்கிலே. . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/26&oldid=981804" இலிருந்து மீள்விக்கப்பட்டது