பக்கம்:அனிச்ச மலர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

அனிச்ச மலர்

 வந்தாள். முதலில் சுமதியைத் தடுக்கவோ பதிலுக்குத் தாக்கவோ செய்யாமல் தன்மேல் அவளுக்கு ஏற்பட்ட ரவுத்திரத்தை அப்படியே அனுமதித்தாள் மேரி. கன்னையா தாங்கமாட்டார் என்பதனால் அவரை மட்டும் படுக்கை அறைக்குள் போய் உள்ளே தாழிட்டுக் கொள்ளும்படி ஜாடை காட்டினாள். அவரும் அப்படியே செய்து தப்பினார்.

சுமதியின் கோப வெறியும் ஆத்திரமும் தணிந்தபின் மேரி மெதுவாக அவளைச் சமாதானப்படுத்த ஆரம்பித்தாள். "உன்னை லட்ச லட்சமாகச் சம்பாதிக்கிற கதாநாயகியா ஆக்கப் போறாரு. புகழேணியின் உச்சிக்குக்கொண்டு போகப்போறாரு. நீயே யோசனை பண்ணிப்பாரு. அவரிட்ட இப்படி நடந்துக்கலாமா? இங்கே நடந்தது யாருக்குத் தெரியும்? யார் உன்னைத் தப்பா நினைக்கப் போறாங்க ? படிச்சவளான நீயே இப்படிப் பட்டிக் காட்டுப் பொண் மாதிரியா நடந்துக்கிறது? ஒண்னும் ஆகாது! நீயே கலவரப்படுத்தி ஊரைக் கூட்டி ஒப்பாரி வச்சு எல்லாருக்கும் உன்மேலே சந்தேகம் வர்ர மாதிரிப் பண்ணிப்பிடப்போறே. ரெண்டு 'பில்ஸ்' தரேன். முழுங் கிட்டுத் தண்ணியைக் குடிச்சுட்டு நடந்ததை மறந்துடு. வீண் வம்பு பண்ணி அடம்பிடிச்சேன்னா நீயா எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லேன்னு சொன்ன கதையா ஆயிடும்” என்று பாதி நயமாகவும், பாதி மிரட்டலாகவும் சொன்னாள் மேரி. சற்று நிதானப்பட்டவுடன் வெளியூரில் தான் அநாதரவாக இருப்பது சுமதிக்குப் புரிந்தது. அழுது கதறி ஆகாத்தியம் பண்ணுவதனால் தானே தன் நிலைமையை வெளிப்படுத்திக் கொண்டதாய் ஆகிவிடும் என்ற பயமும் தற்காப்பு உணர்வும் வேறு அவளுக்கு ஏற்பட்டன. தன் ஆத்திரத்தையும் கோபத்தையும் பார்த்து அவர்கள் பதிலுக்குப் பழிவாங்க முற்பட்டுவிட்டால் புது ஊரில் புது இடத்தில் புது மனிதர்களுக்கிடையே தன் நிலை எவ்வளவு நிராதரவாகப் போய்விடும் என்ற எண்ணிய போது சுமதிக்குப் பயமாயிருந்தது. அவள் சுதாரித்துக் கொண்டு விட்டாள். . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/116&oldid=1131728" இலிருந்து மீள்விக்கப்பட்டது