பக்கம்:அனிச்ச மலர்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

171


வீடு வந்ததும் இறங்கி ஓடிப்போய்த் தன் அறைக்குள் நுழைந்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டாள் சுமதி. மேரி எவ்வளவோ தட்டிப் பார்த்தும் சுமதி கதவைத் திறக்கவில்லை.

மேரிக்குச் சந்தேகமும் பயமும் ஏற்பட்டுவிட்டன. இம்மாதிரி மனநிலையில் பெண்கள் என்னென்ன பயித்தியக்காரத் தனங்களைச் செய்வார்கள் என்று சிந்தித்துப் பதறினாள் மேரி. அறைக்குள் தூக்கு மாட்டிக் கொள்வாளோ, மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பு வைத்துக் கொள்வாளோ, தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக என்றெல்லாம் எண்ணி மேரி மனம் பதைத்தாள். சுமதியை எப்படிக் கதவு திறக்கச் செய்வது என்று மேரிக்குப் புரியவில்லை. சுமதியோ வெறுப்பும் பிடிவாதமுமாக உள்ளே இருந்தாள். “இன்னும் ரெண்டு நிமிஷத்திலேயே நீ கதவைத் திறக்கலேன்னா நான் போலீசுக்கோ ஃபயர் சர்வீசுக்கோ ஃபோன் பண்ண வேண்டியிருக்கும். வேறே வழி இல்லை" என்று. வெளிப்புறமிருந்தே சாவித் துவாரத்தின் அருகே வாயை வைத்து இரைந்து கத்தினாள் மேரி. உடனே பயந்து போய்ச் சுமதி கதவைத் திறந்துவிட்டாள். உள்ளே துழைந்து மேரியிடம், "பாவி! கடைசியிலே என்னை வயி றும் பிள்ளையுமா நடுத்தெருவிலே நிறுத்தியாச்சு உனக்கு இப்போ திருப்திதானே? போதுமோ இல்லியோ?” என்று கூப்பாடு போட்டுத் தலையிலும் வயிற்றிலுமாக மாறிமாறி அடித்துக்கொள்ளத் தொடங்கினாள் சுமதி.

மேரிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. வேணாம்! சொன்னாக் கேளு சுமதி கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டி வம்பு பண்ணாதே. வீணா நீயே உன் பேரைக் கெடுத்துக்கப்போறே. இதைச் சரிப்படுத்த எப்பிடியும் நான் ஹெல்ப் பண்றேன். என்னை நம்பு” என்றாள் மேரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அனிச்ச_மலர்.pdf/173&oldid=1121463" இலிருந்து மீள்விக்கப்பட்டது