(214
அப்பாத்துரையம் - 38
7. காதலைத் தவிர்த்த நோன்பே
காதலை நாடிய நோன்பாயிற்று
ஹாலோஃபர்னஸும் ஜாக்குவனெட்டா முதலியோரும் நாடகம் நடத்த முடியும் என்று வீம்படித்தனரேயன்றி உண்மையில் நடிக்கத் திறமுடையகளல்லர். அவர்கள் நாடகம் தெருக்கூத்திலும் மோசமாயிருப்பினும், காதல் சிதைவால் அயர்ச்சியுற்றிருந்த நண்பர்கட்கும் பெண்டிர்க்கும் அஃது ஒரு நல்ல கேலிக்கூத்தாய் அமைந்தது.
நாடகத்தினிடையில் இளவரசிக்கு அவர் தந்தை இறந்து விட்டதாகத் தூதன் ஒருவன் வந்து சொன்னான். உடனே கேளிக்கைகளை எல்லாம் விட்டு அவர்கள் புறப்படலாயினர். அரசனும் நண்பரும் தாம் காதலுக்காகப் பட்ட பாடுகள் அனைத்தும் வீணாகின்றனவே என்று நினைத்து அவர்களைத் தடுத்துத் தமக்கு மணஉறுதி தந்தேனும் செல்லவேண்டும் என்று மன்றாடினர்.
பெண்டிர், “உங்கள் மனம் நிலையற்றது. ஆதலின் உங்கள் காதலை இப்போது நம்பமாட்டோம். மண உறுதிக்கு எம் தந்தை இறந்த இந்நேரம் நல்லநேரமும் அன்று. ஆகவே முன் காதலைத் துறந்து நோன்பு எற்று அதனைக் கைவிட்ட நீர் அங்ஙனம் கைவிடாமல் விடாப்பிடியாக எங்கள் பேரால் ஓராண்டு நோன்பு நோற்பீரேல் அதனிறுதியில் எங்கள் காதலை உங்களுக்கு உவந்தளிப்போம்” என்றனர்.
காதலர்கள் வேறு வழியற்று அவ்வேற்பாட்டை ஏற்றனர்.
அவ்வேற்பாட்டின்படி ஒராண்டளவும் அந்நால்வரும் இன்பவாழ்வு, நல் உடை, உணவு முதலிய யாவற்றையும் துறந்து முறையே அறநிலையங்கள், மருத்துவ விடுதிகள், துணையற்ற சிறுமியர் பாதுகாப்பிடங்கள், சீர்த்திருத்தப் பள்ளிகள் ஆகியவற்றிற்குச் சென்று அரும்பணியாற்றினர்.
அதன் இறுதியில் அவர்கள் காதல் உறுதிப்பாடுடையதே எனக் கண்டு பெண்டிர் இறந்த அரசனுக்கான பரிவையும் நீத்து அவர்களை மணந்து கொண்டனர்.
காதலரின் காதற் சீரழிவு ஒரு முடிவுக்கு வந்து அவர்கள் நல்வாழ் வெய்தினர்.