மருதூர் மாணிக்கம்
187
துடன் மற்போரிட்டனர். இது ஒரு சிறிதே பயன் தந்தது. அவர்கள் நடு ஆற்றெல்லை கடந்தனர்.
இயற்கையே இப்போது அவர்களுக்கு உதவிற்று. ஆறு ஓரிடத்தில் முழு அரைவட்டமாக வளைந்தது. இதனால் நடு நீரோட்டமே அவர்களை மறு கரைப்பக்கம் கொண்டு சென்றது. கரைமீதிருந்த புதர்களையும் பாறைகளையும் கையால் பற்றிச் சில சீடர்கள் கரையேறினர். ஏறியவர்கள் ஆடையை முறுக்கி வீசி மற்றவர்களையும் ஒவ்வொருவராகக் கரையேற்றினர்.
பாரத வீரனும் கோவேறு கழுதையும் ஒரு சுழியில் சிக்கிச் சுழன்றனர். சுழியின் செயலால் கோவேறு கழுதை ஒருபுறமும், பாரத வீரன் ஒருபுறமுமாக இழுத்துச் செல்லப்பட்டனர். நீரிலிருந்தே இரு சீடர்கள் தம் மேலாடையை வீசிப் பாரத வீரனைப்பற்றி இழுத்தார்கள். அதேசமயம் கரையிலுள்ள ஒவ்வொருவரும் இதே மாதிரி அவர்களைப் பற்றியிழுத்தார்கள். சுழியின் இழுப்புக்களிலிருந்து இதனால் பாரத வீரனை மீட்டுக் கரை சேர்க்க முடிந்தது. கரை சேர்ந்த பின்புகூட அவன் களையார அரைமணி நேரம் பிடித்தது.
பட்டி மந்திரி நடு ஆற்றுக்கு வருமுன்பே, கழுதையின் தலைக்கயிற்றை நழுவவிட்டுவிட்டான். ஆனால் விரைவில் அவன் அதன் வாலைப்பற்றிக் கொண்டான். கழுதையின் இயல்புப்படி, தலைவனென்றும் பாராமல், அது பின்காலால் உதைக்கத் தொடங்கிற்று.ஆனால் என்ன வந்தாலும், உதைகளையும் மிகுதி வாங்காமல், கழுதையின் வாலையும் நழுவ விட்டு விடாமல், அவன் விழிப்பாயிருந்தான். நல்லகாலமாக, கழுதையின் முன் காலுக்கு நிலப்பிடிப்பு இல்லை. அதனால் அதன்பின் காலுதைக்கு அவ்வளவு வலு இல்லாது போயிற்று.
பட்டிமந்திரியின் ஆடைகள் கெட்டியானவை. நீரில் தோய்ந்தபின் அவை தோல்போல் காற்றேறாதவையாயின. ஆயினும் கழுதையின் உதைகளால், அதன் உட்புறம் காற்றேறிற்று. ஆடைகள் தோற் பைகள் போல் உப்பி அவனை மிதக்கவிட்டன. உப்பலான அவன் உடல் மேலும் உப்பலாகக் காட்சியளித்தது. அவ்வுருவத்தைக் கண்டு, கரையேறிய சீடர்கள் விலாப்புடைக்கச் சிரித்தனர். கரையேறாதவர்கள்கூட, கரையேற முடியாமல்