பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18. கில்லியட்டின் தன் மறுப்புப் பண்பு

ஸென்ட் ஸாம்ப்ஸனில் கில்லியட் சென்றபின், யாரும் அவன் பயணம் பற்றி எதுவும் நினைக்கவில்லை. அது ஒரு பித்தன் முயற்சி என்று கருதி அதை மறந்துவிட்டனர். லெத்தியரி எதிலும் பற்றின்றி அறையில் அடைபட்டுக் கிடந்தான். ஆனால் டெரூசெட் வாழ்வில் இப்போது புதிய மாறுதல் ஏற்பட்டிருந்தது. லெத்தியரிக்கு ஆறுதல் கூறப் பழைய ஊர்வட்டமுதல்வர் ஹெரடும் புதிய முதல்வர் காட்ரேயும் வந்திருந்தனர். ஹெரடு ஆறுதல் தரும் விவிலிய நூற்பகுதி ஒன்றை வாசித்தான். அதில் “ரெபக்கா கண்களை உயர்த்தினாள்; ஈசாக்கை அவள் கண்டாள்" என்ற பகுதியை ஹெரடு வாசிக்கும்போது டெரூசெட் கண்ணை உயர்த்தினாள். காட்ரே அவளைப் பார்த்தான். அவள் உள்ளத்தில் அவளை அறியாமல் அதுமுதல் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அவளையும் அறியாமல் அது சமயப் பற்றாக வளர்ந்தது. அவள் வாரம் ஒருமுறைகூடக் கோயிலுக்குப் போகாதவள், வாரம் இருமுறை செல்லத் தொடங்கினாள். விவிலிய நூலில் அக்கரையற்றவள், அது பற்றிய காட்ரே விளக்கவுரையை எழுத்துவிடாமல் கேட்டாள். வீட்டில் அதே பகுதியை மீண்டும் மீண்டும் படித்தாள்.

குளூபின் ராந்தேனிடமிருந்து பெற்ற பணத்தை லெத்தியரியிடம் கொடுக்கமாட்டான் என்பது ராந்தேனுக்குத் தெரியும். ஆகவே, லெத்தியரியிடம் குளூபின் பணம் பெற்ற செய்தியைக் கூறுவதே அவனிடம் பழி வாங்க வழி என்று அவன் எண்ணினான். ஆகவே, தொலை சென்றதும் இது செய்தியை லெத்தியரிக்கு எழுதியிருந்தான். அதை வாசித்த லெத்தியரி மீண்டும் அடக்க முடியாத ஆத்திரமும் கோபமும் கொண்டான். இதனால் அவன் உறங்க முடியவில்லை. பலகணி வழியாகக் கடற்காற்று வாங்கியவண்ணம் துறைமுகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் கண்களில் அவன் உயிரினும் அரிய