பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. ஷேக்ஸ்பியர்

1. முன்னுரை

மேனாட்டார் தம் கவிஞரது வாழ்க்கை வரலாற்றின் சிறு பகுதிகளையும் விடாது கோத்துப் பாரிய நூல்கள் எழுதிச் சேர்ப்பது வழக்கம். ஆனால் ஷேக்ஸ்பியர் ஒருவர் வகையில் மட்டும் நம் நாட்டுவாடை அப்பக்கம் வீசிற்று என்னலாம். ஏனெனில், அவர் வாழ்க்கையைப் பற்றிய செய்திகள் நமக்கு மிகவுங் குறைவாகவே கிட்டியுள்ளன. இது வரலாற் றாராய்ச்சியாளர் குறையன்று. அவர்கள் செய்திகள் இல்லாத இடத்திலும் வருந்தித் தேடிப் புனைந்துரையும், ஐயஉரையும், உயர்வு நவிற்சியுரைகளுஞ் சேர்த்து மலைமலையாக நூல்களை எழுதிக் குவித்துள்ளனர். ஆயினும், இவையனைத்தும் பிற்கால முயற்சிகள்.

ஷேக்ஸ்பியர் காலத்தார் அவர் நூல்களைப் போற்றினரே யன்றி அவர் வாழ்க்கை வகையில் கவனம் செலுத்தாது போயினர். மேலும் ஷேக்ஸ்பியர் ஒரு நல்ல நாடகாசிரியர் என்று அவர்கள் கண்டிருந்த போதிலும், அவர் உலகப் பெருங் கவிஞராய் விளங்குவார் என்று அவர்கள் பெரும்பாலும் நினைத்திருக்க மாட்டார்கள். உண்மையில் ஷேக்ஸ்பியர் புகழ் அவர் வாழ் நாட்களில் இங்கிலாந்தளவிலேயே நின்றிருந்தது. அவர் காலத்திற்குப்பின், அதுவும் சிறப்பாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலுந்தான். அஃது இங்கிலாந்தின் எல்லையைக் கடந்து ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் பரந்து உலக முழுமையினையும் திறை கொள்ளும் பெருமை பெற்றது. இன்று ஷேக்ஸ்பியரின் கலைப் படையினை உலகம், உலக முதல்வனது படைப்பாகிய இயற்கைக்கே ஒப்பாகக் கொண்டு போற்றுகின்றது.