பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. ஸர். வால்ட்டர் ஸ்காட்

புனைகதை மன்னர்

1. பொதுமையுள் புதுமை

ஸர் வால்ட்டர் ஸ்காட்டைப் புனைகதை உலகின் ஷேக்ஸ்பியர் என்று கூறலாகும்.

வரலாற்றுச் சார்பான புனைகதைகள் எழுதுவதிலும், பொதுமையுள் வியப்பெனும் புதுமைச்சுவை தோன்றப் புனைகதைகள் எழுதுவதிலும், ஆங்கில இலக்கியத்தில் மட்டுமன்று; உலக இலக்கியத்திலேயே இவருக்கு ஈடில்லை என்னலாம்.

இலக்கிய உலகிற்கு ஒரு திருவருட்பேறெனக் கருதக்கூடிய இப்பெரியார், தமது 31ஆம் ஆண்டு வரை இலக்கியப் பெருமைக்கான குறிகள் எதுவும் இல்லாதவராய் இருந்தனர் என்பதும், அறிவிலும் செயலாண்மையிலும் மிக்க இவருடைய தந்தையாரால், பாட்டுப்பாடி இரந்துண்பதைத் தவிர வேறெத்தகைய நற்பணிக்கும் உதவாதவர் என வெறுத்துரைக்கப் பெற்றவர் என்பதும் இயற்கையின் புதிர்களுள் வைத்தெண்ணத் தக்க செய்திகளேயாகும்.

ஜான்ஸனது வாழ்க்கையைச் சுவைபடப் பாஸ்வெல் என்பார் எழுதியதுபோல ஸ்காட்டின் வாழ்க்கையையும் நயம்பட அவர் மருகரான லாக்கார்ட் என்பவர் எழுதியுள்ளார்.

ஸர் வால்ட்டர் ஸ்காட் 1771ஆம் ஆண்டு ஆகஸ்டு 15இல் எடின்பர் நகரில் கல்லூரித் திருப்பு (College Wynd) என்னும் பகுதியில் பிறந்தார். இவர் தாய் தந்தையரிருவரும் ஸ்காத்லாந்தின் பழமையான வேளாண் குடியில் பிறந்தவர்கள். தாய்வழிப் பாட்டனார் ஒரு மருத்துவர். தந்தையாரோ ஓர் எழுத் தாளராயிருந்தார்.