ஆங்கிலப் புலவர் வரலாறு
165
தாள்களில் அவருடைய மிகச் சிறந்த இனிய நேரப்போக்குக் கதைத் தொகுதிகளும், கிறிஸ்துமஸ் பண்டிகைப் பாட்டுக்களும் வெளிவந்தன.
நூல்கள் எழுதுவதோடு கூட அவற்றின் நடுப்பகுதிகளைப் பொது மக்க ள் முன் படித்துக் காட்டுந் தொழிலையும் அவர் அடிக்கடி மேற் கொண்டார். சிறப்பாக இம் முறையில் அவருக்கு அமெரிக்காவில் வெற்றி ஏற்பட்டது. 1842-லும் 1867-68-லும் அவர் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தார். ஒவ்வொரு நாளிலும் அங்கு 300 பொன் முதல் 2000 பொன் வரை கிடைத்து வந்ததாம். இறக்கும்போது அவரது செல்வநிலை 100,000 பொன் என மதிக்கப்பட்டதாம்.
7. வெற்றி வாழ்க்கை
ஆனால், டிக்கன்ஸின் பெருமை அவர் ஈட்டிய பொருளின் பெருமையேயன்று. அவர் நூல்கள் அனைத்திலுமுள்ள கதைத் தலைவர்கள் புனைவுருக்களேயாயினும் உண்மையான வாழ்க்கை ஓவியங்களே போல்வர். நகைச்சுவை, வாய்மை, ஆழ்ந்த பரிவு ஆகிய மெல்லிய பட்டுக் கயிறுகளால் அவர் தம்முடன் படிப்போர் குழுவைப் பிணித்துக்கொள்ளும் அரிய ஆற்றலுடையவர். இவ்வளவுக்கும் மேலாக அவர் எழுதிய நூல்களத்தனையும் பெரும் பொருளீட்டுவதற்காகவோ அல்லது பிறர் இன்பத்திற்காகவோ மட்டும் எழுதப்படவில்லை. அவை ஒவ்வொன்றிலும் அவரது ஒவ்வொரு ஆழ்ந்த கருத்து, அல்லது உண்மை. அல்லது அறிவுரை கதையுடன் கதையாய்ப் படிப்போர் மனத்துட்சென்று அதனை உருக்கி நல்ல வழியில் தம்மையறியாமலே உய்க்கும் தன்மையுடையதாய்க் கிடக்கின்றது. அவருடைய நூல்களின் ஆற்றலால் இன்று அவர் காலத்து ஏழைகள், சிறுவர்கள் பட்ட கொடுமைகள் பல ஒழிந்தன. ஏழைகளுக்கென வாழ்ந்த மிகச் சிறந்த பெரியார்களுள் அவர் ஒருவர் ஆவர்.