பக்கம்:அமர வேதனை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் எண்ணங்கள்

என் உள்ளத்தில் எண்ணங்கள்

புகையும் நெருப்பு: சுடரும் கனல்கள்!
தெறிக்கும் பொறிகள்; எரிக்கும் கங்குகள்;
குமுறும் எரிமலை; கொதிக்கும் குழம்பு:
குமையும் காளவாய்; பொங்கும் உலை,
ஈர விறகிலே பற்றிய அனல்.
வைக்கோல் போரில் பிடிக்கும் பெருந் தீ;
உருகி ஓடும் இரும்பின் திரவம்,
கொதிக்கும் ஈயக்குழம்பின் குமிழிகள்.

என் உள்ளத்தில் எண்ணங்கள்

குளிர் பூஞ்சுனையின் தெளிந்த நீரின்
நுண் துகள்கள், குமிழிகள், சிற்றலை.
ஓடும் ஆற்றின் நெளிவுகள், சுழிவுகள்.
அலையும் கடலின் ஆர்த்தெழு திரைகள்:
திரைமேல் நுரைகள் ; பொங்கும் நுரையின்
பூரிக்கும் மொக்குகள்; வெடிக்கும் மலர்கள்.
வெயிலில் மின்னும் கடலின் அசைவுகள்.
நிலவில் மிளிரும் நீரொளிச் சிதறல்.
வெள்ளப் பெருக்கின் வீரத் துடிப்பு;
சாடும் நீரின் வேக விரைவு.
விண்வெளி வீழும் மழையின் கம்பிகள்.
தரையில் ஓடும் நீரின் கக்கலும் கரைசலும்.
தேங்கிய நீரின் சாக்கடை நுரைப்பு.
நாற்ற ஊரணியின் பாசிப் பரப்பு.

வல்லிக்கண்ணன்

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/43&oldid=1278899" இலிருந்து மீள்விக்கப்பட்டது