பக்கம்:அமுதும் தேனும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

கவிஞர் சுரதா


"குண்டலத்தூர் பொற்கொல்லன் தாலி செய்து
கொடுப்பதற்குள் மாரடைப்பால் மாண்டு விட்டான்.
தண்டுகுடி தட்டானோ விடிவ தற்குள்
தாலிசெய்ய இயலாதென் றுரைத்து விட்டான்.
கண்ணகியாம் என்மகட்கு நாளை காலை
கல்யாணம் நடந்தாக வேண்டும் ஐயா!
விண்முகிலைப் போன்றவரே! உம்மை யன்றி
வேறுகதி எனக்கில்லை” என்றான் ஏழை.

நிதிபதியாம் அவனதனைக் கேட்ட வின்னர்
நேரிழையா ளிடத்திலதை எடுத்து ரைத்தான்.
மதுமதிபோல் குளிர்ந்தமுகம் கொண்ட மங்கை
மணாளனிடம் தாலியினைக் கழற்றித் தந்தாள்.
விதைவிதைத்துப் பயிரிடுவோ னிடத்தில், அன்னோன்
விலைமிகுந்த பொற்றாலி யதனைத் தந்தான்.
பொதுவுடமை நிலாவெளிச்சம் புவிமீ தெங்கும்
போய்ப்பரவும் இரவிலவன் பெற்றுச் சென்றான்.

நிலத்தின்கண் புகழ்பரப்பி வந்தோன், மீண்டும்
நேராக மனைவியிடம் வந்து, "கொல்லி
மலைத்தேனே! தாலியைஉன் னிடம்நான் கேட்க
மலைத்தேனே! பெண்மானே!” இங்கெ னக்குன்
தலைவேண்டும் எனினுமதைத் தருவா ளன்றித்
தமிழ்ப்பெண்தன் தாலியினைத் தரவே மாட்டாள்.
மலைச்சாரல் மயிலேநான் கேட்ட போது
மறுக்காமல் நீயதனைக் கழற்றித் தந்தாய்.