பக்கம்:அமுதும் தேனும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

கவிஞர் சுரதா



அகந்தைகொண்ட ஓர்விதவை, காஷ்மீ ரத்தை
ஆண்டுவந்தாள். அனைவரையும் அதட்டி வந்தாள்.
சுகந்தையெனும் அவ்விதவை அமைச்ச னோடு
தொடர்புகொண்டு நடத்தைகெட்டு நாச மானாள்.
அகந்தைகொண்ட மற்றொருத்தி அனலை என்பாள்
அந்நாளில் இலங்கைதனை ஆண்டு வந்தாள்
புகழ்வளர்க்க வேண்டியவள் ஒழுங்கங் கெட்டுப்
போனதனால் தீக்குழியில் தள்ளப் பட்டாள்.

குற்றுகரம் தமிழ்மொழியில் தோன்றா முன்பே
குடிபெயர்ந்தோர் மரபில் வந்த தெலுங்குப் பெண்ணே!
சற்றிதனை உற்றுக்கேள்! மறைந்த மன்னன்
தாரம்நீ! இந்நாட்டின் தாய்நீ! நீயோ
அற்பசுகம் பெறவேண்டி என்னை இங்கே
அழைத்துவர ஆள்விடுத்தாய். காற்ற டித்தால்
நெற்பயிர் தான் அசைந்திடுமே யன்றி, அந்த
நெற்பயிருக் குரியவயல் அசைவ தில்லை.

எட்டியெட்டி இருக்கும்விண் மீன்கள் போலே
எப்பொழுதும் இருப்பதற்கு முயலும் என்னை
ஒட்டிஒட்டி உறவாட அழைக்கின் றாய்நீ
ஓயாமல் தொந்தரவு செய்கின் றாய்நீ
விட்டுவிட்டுக் குயில்கூவும் பருவம் வந்து
விட்டதென்று நினைவூட்டி அருகில் நின்று
மொட்டுமொட்டாய்ச் சிரித்தாலும் மயங்க மாட்டேன்.
மூங்கிலிலை மேற்பனிபோல் தூங்க மாட்டேன்.