பக்கம்:அமுதும் தேனும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

கவிஞர் சுரதா



முன்வந்த தைமூரும் செங்கிஸ் கானும்

முழுவெற்றி பெறவில்லை எனினும், இங்கே

உன்தந்தை, உன்பாட்டன் உன்முப் பாட்டன்

ஓங்குபுகழ் பெற்றுயர்ந்தார் பெண்ணே! என்றான்.

பொன்சிந்தும் அரண்மனையில் பிறந்த நானும்

புகழ்பெறுவேன் அவர்களைப்போல் என்று ரைத்தாள்.

உன்வாழ்க்கை வரலாற்றில் நானி ருப்பேன்.

உலகவர லாற்றில்நீ இருப்பாய் என்றான்.


பத்தடுக்கு மாளிகையை விட்டி றங்கிப்

பைங்கிளிநான் உமைக்கான வரும்போ தெல்லாம்

தித்திக்கும் கனிகொண்டு வருவேன். இன்றோ

சிறந்தநூல் கொணர்ந்துள்ளேன். நீங்கள் இந்தப்

புத்தகத்தைப் படித்துக்கொண் டிருங்கள். நான்போய்ப்

பூப்பறித்து வருகின்றேன் என்றாள். "உன்வாய்

முத்திரைப்பூ இருக்கையிலேன் வேறு பூக்கள்!

முடிசார்ந்த மன்னவனின் மகளே!" என்றான்.


பெண்ணரசி மெதுவாக எழுந்தாள். காதற்

பேச்சாளன் அன்னவளை நோக்கி "நேற்றென்

தொண்டையில்மீன் முள்மாட்டிக் கொண்ட தென்றான்.

தோகையதைக் கேட்டவுடன் துடிக்க லானாள்.

மண்மயங்கும் இரவினிலே முக்கா டிட்டு

வந்தென்னைச் சந்திக்கும் நிலவே! அந்த

வண்டுகளைப் பாரந்த மலரி லென்றான்.

வானத்தில் பாருங்கள் பிறையை என்றாள்.