பக்கம்:அமுதும் தேனும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

கவிஞர் சுரதா


பாத்திரத்தின் அருகினிலே மெதுவாய் அந்தப்
பத்தரைமாற் றுத்தங்கம் நடந்து சென்றாள்.
ஆத்திரத்தோ டவ்விடத்தில் நின்ற மன்னன்
அதட்டலுற்றான். பேரழகி அதிர்ச்சி யுற்றாள்.
நீர்த்துளிகள் விழிவாசல் வழியில் நிற்க,
நிலைகுலைந்து கொப்பரையின் அருகில் நின்று,
"பூத்தமலர் மீதுறங்கும் வண்டே!"என்றாள்.
பொன்னழகன் பெருமூச்சு மட்டும் விட்டான்.

ஒன்றுபட்ட காதலரே! நமக்கிங் கேதும்
ஊறுவரா தென்றெண்ணிக் கொண்டி ருந்தோம்.
இன்றிந்தச் சோதனைக்கா ளாகி, இங்கே
இருவருமே துடிக்கின்றோம். இந்த நாட்டின்
மன்னவராம் என்தந்தை உம்மைக் கொல்ல
வற்புறுத்து கின்றார்நான் என்ன செய்வேன்!
புன்னைமரம் வெட்டுண்டு வீழ்ந்தால், இந்தப்
பொற்கொடியாள் நிழலுக்குப் போவதெங்கே?

வித்தையினால் நான்வெல்வேன். நீயோ என்னை
விழிகளினால் வென்றிடுவாய் என்று கூறி,
முத்தமிட்ட காதலரே! புதிய பூக்கள்
மூச்சுவிடும் தோட்டத்தில், தங்கள் ஆவி
அத்தமிக்கக் காரணம்நான் ஆனேன். அந்தோ!
அனல்பட்டுத் துடிதுடிக்கும்போது நீங்கள்
சத்தமிட்டால் நம்முறவு தெரிந்து போகும்.
தையலென்றன் சரித்திரமும் சாம்ப லாகும்.