பக்கம்:அமுதும் தேனும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்



அலைகடலும் அக்கடலை நாடிச் செல்லும்
ஆறுகளும் நீர்வழங்கும் ஆந்தி ரத்தில்,
மலைபடுத்துக் கொண்டிருக்கும் சிற்றுர் ஒன்றில்,
மகாகவியாம் சகந்நாதன் என்பான் வாழ்ந்தான்.
பலர்புகழும் தைலங்கர் மரபில் வந்த
பாவலனாம் அன்னவனோ இசைஞா னத்தில்
தலைசிறந்தோன்; அலங்கார சாத்தி ரத்தில்
தனக்குநிகர் இல்லையென விளங்கி வந்தோன்.

குடைசெய்யக் கூடைமுறம் கட்ட, மாந்தர்
குடியிருக்கும் குடிசைக்குக் கூரை போடப்
படுக்கும்பாய் பின்னமுடி யாத வாறு
பனையோலைப் பஞ்சத்தைத் தோற்று வித்தோர்.
இடைக்காலப் புலவர்களாம். அவர்கள் போலும்,
எண்ணற்ற புத்தகங்கள் எழுதிடாது
கடைச்சங்க காலத்துச் சான்றோர் போன்று
கச்சிதமாய்ச் சிலநூற்கள் மட்டும் தந்தோன்.