இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருவள்ளுவர் திருக்குறளில் சொல் வன்மை என்னும் தலைப்பில், கேட்டார்ப் பிணிக்கும்படிப் பேசல் வேண்டும்; திறனான சொற்களைச் சொல்ல வேண்டும்; தம் சொல்லைப் பிறிதொரு சொல் வெல்லாதபடிப் பேசல் வேண்டும்; சோர்வு இன்றி அஞ்சாமல் உரையாடல் வேண்டும்; பிறர் கேட்டு விரைந்து ஒழுகும்படி நிரந்து இனிது பேசல் வேண்டும்- என்றெல்லாம் சொல் வன்மையுடன் உரையாடும் திறன் பற்றிக் கூறியுள்ளார். இத்தகைய திறமையான உரையாடல்கள் சிலவற்றைக் கம்பராமாயணம்- அயோத்தியா கா ண்டத்தில் காண்போம்:
கூனியின் உரைத் திறன்
தனது உரைவன்மையால் எண்ணியது முடித்ததில் முதல் பரிசுக்கு உரியவள் மந்தரை என்னும் கூனியே யாவாள். தன் மகன் பரதனினும் இராமனையே மிகவும் பேணி வந்த கைகேயியின் மாற்ற முடியா மனத்தையும் கூனி மாற்றிவிட்டாள் அல்லவா?