பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 203.

துறந்தாள் துயரம் தன்னை; துறவாள் துயர் கோசலை; இற்
பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ

(35}

இதில் இறுதி அடி வேற்றுப் பொருள் வைப்பாகும்.

ஊழ் வினை

மரவுரி அணிந்த இராமனைக் கண்ட வசிட்டன், வாழ்வு பெற வேண்டிய மங்கல நாளிலே மரவுரி உடுத்திருக்கிறான். நான்முகன் முயலினும், ஊழ்வினையை ஒருவராலும் ஒழிக்க முடியாது- என்று கூறினான்.

வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள்
தாழ்வினை அதுவரச் சீரை சாத்தினான்
சூழ்வினை நான்முகத்து ஒருவன் சூழினும் ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பாலதோ?

(159)

ஒரு முகம் அன்று- இரு முகங்கள் அல்ல- நான்கு. முகங்களை உடைய பிரமனாலும் முடியாது என்னும் நயம் இதில் அமைந்துள்ளது. இப்பாடலின் இறுதி அடி வேற்றுப் பொருள் வைப்பு.

உண்டு இடர்

கோசல நாட்டு மன்னனாகிய தயரதனின் மனைவிமார்கள் அறையினின்றும் வெளியில் வந்து புலம்புகின்றனர். இதுவரையும் அவர்களுடைய தாமரை போன்ற முகங்களைக் காணாத ஞாயிறும் இப்போது கண்டு விட்டான். விண்ணில் உறையும் இந்திரனாயினும் துன்பம் அடைவதுண்டு. துன்பம் வந்த போது உறாத, வருத்தங்கள் என்ன இருக்க முடியும்?

தண்டலைக் கோசலைத் தலைவன் மாதரைக் கண்டனன் இரவியும், கமல வாள் முகம்; விண்தலத்து உறையும்கல் வேந்தற்கு ஆயினும் உண்டு இடர் உற்றபோது என் உறாதன !

(179)