பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212 - சுந்தர சண்முகனார்


ஆறு செல் படலம்

பிடி ஊர்தி

பரதனுடன் காடு செல்லும் மக்களுள் பெண்டிர் சிலர் பெண் யானையின் மேல் ஏறிச் சென்றனராம். இங்கே கம்பர் ஒரு தற்குறிப்பேற்றம் செய்துளார். தாமரையை வென்ற கால்களை உடைய பெண்டிருடன் நடையழகில் போட்டியிட்டுத் தோற்றுப் போன பிடிகள் (பெண் யானைகள்) தாம் தோற்றதற்கு ஈடாக அப் பெண்டிரைச் சுமந்து சென்றனவாம்:

சேற்றிள மரைமலர் சிதைந்தவாம் எனக்
காற்றளம் பொலிதரு சன்னி மாரொடும்
ஏற்றிளம் பிடிக்குலம் இகலி இன் நடை
தோற்று இள மகளிரைச் சுமப்ப போன்றவே

(29)

காற்றளம் என்பதைக் கால்தளம் எனப் பிரிக்க வேண்டும். பெண்களின் நடைக்குப் பிடியின் நடையை உவமிப்பது இலக்கிய மரபு. நடையில் பிடிகள் தோற்றதால் பெண்களைச் சுமக்கின்றனவாம்.

இவ்வாறு, சுவையான பல தற்குறிப்பு ஏற்றங்களைக் கம்பர் தம் பாடல்களில் செய்து காட்டியுள்ளார். இன்னும் தன்மையணி, ஒப்புவினை புணர்ப்பு (சமாதி) அணி முதலிய அணிகள் சிலவும் உள்ளன. அவற்றை, யெல்லாம் விவரிப்பின் பெருகும்.