பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

8

அருள்நெறி முழக்கம்


அவரவரது உள்ளத்திற்கேற்ப ஆண்டவனைக் காண்பதுதான் வழிபடுவதுதான் நன்மை தரும்; வன்மையுமாம். அந்த உயரிய கொள்கையை அறிந்த பாரதி மக்கட் சமுதாயத்தின் நலங்கருதி கண்ணனைப் பலவிதமாகத் தனது கற்பனை உலகில் கண்டு மகிழ்ந்து பாடி இருக்கின்றான். பாரதி பாடிய கண்ணன் பாட்டு தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவர் உள்ளத்திலும் இடம்பெறவேண்டும் கண்ணன் பஜனை எங்கும் முழங்க வேண்டும். கண்ணனின் கீதை எங்கும் வெற்றி முரசொலிக்க வேண்டும்.

தமிழகம் தெய்வமணம் கமழும் தெய்வத் திருநாடு; பெரும்புலவர்கள் வாழ்ந்திருந்த பொன்னாடு. தமிழ்மக்கள் பழைய இலக்கியங்கட்கு எடுத்துக்காட்டாக, கடவுள் நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக, என்றும் குன்றாப் புகழுடன் விளங்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் படைத்த தரும சிந்தனையாளர்களால் - பழம் பெரும் மன்னர்களால் எழுப்பப்பட்ட பழம்பெரும் கோயில்கள் என்றென்றும் நின்று நிலவக் காண்கின்றோம்.

அன்பும், அருள்நெறியும் நாட்டினில் நல்லன காணத் துணை புரியும். அவை இரண்டும் மக்களிடம் நிலைபெற வேண்டும். அன்பும் அருள்நெறியும் நாட்டில் நல்லதொரு இடத்தைப் பெற்று நல்லன காண வேண்டும் என்ற குறிக்கோளில் உழைக்கத்தான் திருமடங்கள் உண்டாயின.

கிராம மக்களின் போக்கிற்கும் - வாழ்விற்கும் - பண்பாட்டிற்கும், குறிப்பாகச் சொல்லப்போனால் அவர்களின் அறிவுத் திறனுக்கும், அன்பினையும் அருள்நெறியினையும் பரப்பத்தான் பஜனைமடங்கள் எழுப்பப் பெற்றன என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. வழிபாட்டுத் துறையில் மக்களை அதிக ஈடுபாடு உடையவர்களாகச் செய்து அவர்களிடம் வழிபாடும் பக்தியும் வளரப் பாடுபட ஏற்பட்டவைதாம் திருமடங்கள் என்பதை எந்தச் சமயப்பற்றுடைய மனிதனும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. அவைதாம் திருமடங்களின் கடமை என்பதை அதன் தலைவர்களும் உணர்ந்து நடத்தல் வேண்டும். நாட்டு மக்களை