பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

26

அருள்நெறி முழக்கம்


பழமையை மறந்து விடக்கூடாது. அதன் துணைகொண்டுதான் புதுமையை வளர்க்க வேண்டும். அதுதான் பயனைத் தரும்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் பார்ப்பனர்களை வாகனம் தூக்கவும் - தமிழனை நைவேத்திய சாலைகளில் வேலை செய்யவும் சொன்னால் என்ன என்று பகுத்தறிவாளர் பத்திரிகை கேட்கிறது. செய்தால் தவறு ஒன்றுமில்லை. உள்ளம் தூய்மை உடையவனாக ஒழுக்கம் உடையவனாக இருந்தால் ஆண்டவன் முன்னர் வித்தியாசம் கிடையாது. பார்ப்பன அன்பர்களையும் வாகனம் தூக்க முன்வாருங்கள் என்று அழைப்போம். நிச்சயமாக அவர்களும் வருவார்கள். மக்கட் சமுதாயத்தின் நலம் கருதி ஆண்டவனே மண் சுமந்திருக்கும் பொழுது இவர்கள் வாகனம் தூக்க மறுப்பார்களா? ஆனால் இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து இதைப்போல மாற்ற உணர்ச்சி வந்தால் திரும்பவும் மாற்றி அமைக்கத்தான் வேண்டும். அடிக்கடி ஏற்படும் மாற்றம் பண்பட்ட அனுபவத்தைக் கெடுத்துவிடும். தொழிலில் உயர்வு தாழ்வு கற்பிப்பது விரும்பத்தக்கதன்று. வீதி கூட்டுகின்ற தோட்டியும் சமுதாயத்தில் ஒத்த உரிமையும் - பெருமையும் பெற்ற தகுதியுடையவனாக இருத்தல் வேண்டும். யார் எத்தொழில் செய்தாலும் அவன் சமுதாயத்தில் பெருமையாகவே நடத்தப் பெறுதல் வேண்டும். தொழில்களும் நடக்க வேண்டும். தொழிலை நோக்காது மனிதனுக்கு மதிப்பு நல்கும் உணர்ச்சி பெருக வேண்டும். தொழில் வளர்ந்தோங்க வேண்டுமேயானால் மனிதன் தொழிலால் மதிப்புக் கருதுவது கூடாது.

இந்தக் காரியத்தை இன்று செய்து செயலிலும் கொண்டு வந்து விடலாம். இன்று இருக்கின்ற கிளர்ச்சி நாளையும் ஏற்படாதா? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். கடமை வேறு உரிமை வேறு என்பதை உணர்ந்து நாம் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும். இன்றைய சமுதாயத்தில் முக்கியமாக மக்களினத்திற்கு ஒன்றுபட்டு வாழும் உணர்ச்சி வேண்டும். ஒற்றுமையின் பெருமையை விளக்கும் புரட்சிக்கவி பாரதி,