பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

41

அருள்நெறி முழக்கம்


காரியங்கள் - அவர்களின் இலட்சியத்தில் எழுப்பப்பட்ட கொள்கைகள் அனைத்தும் எவ்விதம் நன்மையாக முடியும்? நன்மையாக முடியும் என்று எதிர்பார்த்து இத்தகு காரியங்களில் ஈடுபட்டிருப்பதும் தவறுடையது என்பதை நம்முடைய மதிப்பிற்குரிய தோழர்கள் மறந்துவிடக் கூடாது.

இடித்தலும், எரித்தலும், உடைத்தலும், அழித்தலும் எந்தக் காரியத்தையும் சாதித்து விட முடியாது. நாட்டின் நன்மையைக் கருதித் தொண்டில் ஈடுபடுகின்ற அன்பர்கள் எக்காலத்தும் எந்தவிதக் காரணத்தைக் கொண்டும் தீய செயல்கள் செய்ய முனைதல் கூடாது. ஏன்? சிந்தனையில் - கருத்தில் கூட தீய கருத்துக்கள் தோன்றக் கூடாது. நமது எண்ணத்தின் எதிரொலிதான் நம் வாழ்வில் பிரதி பலிக்கும். எண்ணம்தான் சிந்தனையாக மாறும் -சிந்தனை உருப்பெற்ற பின் செயலில் உருவெடுக்கின்றது. ஆதலால் நாம் எந்தக் காரணத்தைக் கொண்டும் நம் மனதில் தீய கருத்துக்களுக்கு இடம் கொடுத்தல் கூடாது. பகைவர்களிடம் அன்பு சொரியும் பண்பாட்டுடன் நடந்துகொள்ளும் உளப் பண்பு நன்றாக வளரவேண்டும்.

ஒரு நாட்டின் நாகரிகம் - கலாசாரம் - பண்பாடு - வளம் - மொழி - நாகரீகம் முதலியவற்றை அந்நாட்டின் இலக்கியங்களின் மூலந்தான் தெரிந்து கொள்ள முடியும். உண்மையான இலக்கியங்கள்தான் அந்நாட்டின் படப்பிடிப்பு. நம் நாட்டு இலக்கியங்கள் பாதுகாப்பின்றி இருந்த காரணத்தால் கடலாலும் - கறையானாலும் சூறையாடப்பட்டன. எஞ்சியிருக்கின்ற ஒன்று இரண்டு உண்மையான இலக்கிய ஏடுகளையும் இற்றைப் பகுத்தறிவுவாதிகள் எரிக்க முற்பட்டு விட்டார்கள். செய்யத்தகாத - நினைக்கவும் முடியாத காரியத்தையெல்லாம் புதுமையின் துணைகொண்டு அறிவினால் செய்துவிட முடியும் என்று கருதவுந் தொடங்கி விட்டனர்.

இச்செய்தியைக் கேட்டதும் - உண்மையாகத் தமிழ் தமிழ்நாடு - தமிழ்க் கலாசாரம் - ஏன் குறிப்பாகச் சொல்லப்