பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

43

அருள்நெறி முழக்கம்


கூறுகின்றார்கள். கடவுள் இல்லை என்றால் அவர்கள் செய்த அந்தக் களிமண் விநாயகர் பொம்மையை உடைத்திருக்க வேண்டியதில்லையே! “கடவுள் அந்தக் களிமண் பொம்மையிலும் இருக்கின்றார்” என்ற நம்பிக்கையால்தான் அவர்கள் பிள்ளையார் உடைப்புத் தொழிலை மேற்கொண்டார்கள் என்பதை இன்றைய உலகில் யாவரும் நன்குணர்வர்.

என்றும் நம்பிக்கை இல்லாதவனை நம்பிக்கை உள்ளவனாக நம்பும்படி செய்வதுதான் - நம்புகின்ற ஒரு மனித உருவாகச் செய்வதுதான் முடியாத காரியம். நம்பிக்கை உண்டானபின் எந்தக் காரியத்தையும் எளிதாகச் சாதித்து விட முடியும். “உருவத்திலும் கடவுள் இல்லை"யென்று இதுவரை கூறிவந்தார்கள். இன்று “உருவத்திலும் கடவுள் இருக்கின்றார்” என்று கூறும் நிலைமைக்கு வந்து விட்டார்கள். உருவத்திலும் கடவுள் உண்டு என்று கூறும் அவர்களை நம்பிக்கையில் உள்ள அவர்களை வழிபாட்டில் கொண்டு வருவது எளிது. நமக்கு உறுதியான நம்பிக்கை இருந்தால் யார் செய்கின்ற எச்செயலும் நம்மை எதுவும் செய்து விட முடியாது. நம்மிடம் நேர்மையும் - நம்பிக்கையும் - தன்னடக்கமும் - கட்டுப்பாடும் - உறுதியும் தகுதியான இடத்தைப் பெறுவதோடு நன்முறையில் நம் உள்ளத்தில் வளம் பெற வேண்டும்.

யார் எதனைச் செய்தாலும் அதனை அன்புடன் - முக மலர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். எது வந்தாலும் பொறுத்துக் கொள்ளும் நல்லிதயம் வேண்டும்.துன்பஞ் செய்தாரிடத்தும் அன்பு காட்டுங்கள். இன்னல் செய்தாரிடத்தும் அன்புமொழி பேசுங்கள். மாற்றாரிடத்தும் உற்றார் உறவினர் என்ற உள்ளத்துடன் பழகுங்கள். அதுதான் நம்மையும் நானிலத்தையும் வாழ்விக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். ஆடும் புலியும் ஒரே துறையில் நின்று நீர் அருந்திய தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் நாம் என்பதை நினைவுறுத்திக் கொண்டு வாழுங்கள்.