பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

58

அருள்நெறி முழக்கம்


இழந்து விட்டோம். தாயை இழந்த சேய்கள் போன்று தவிக்கின்றோம். தமிழ்த் தந்தை திரு.வி.க அவர்கள் ஓர் உண்மைத் தமிழர்.

சமயம் - சமுதாயம் - சமூகம் - நாடு - பொருளாதாரம் - அரசியல் ஆகிய எல்லாத்துறைகளிலும் புதியதோர் மாற்றங்காண நினைத்துத் தொண்டாற்றினார். சாதிப் பிணக்குகள் நம்மைக் கெடுத்தொழிக்கும் என்பதை உலகிற்கு உணர்த்திய பெருமை தமிழர் தந்தை திரு.வி.க அவர்களுக்கே உரித்தாகும். பெரியார் திரு.வி.க மறைவு சமயவுலகிற்கே ஈடுசெய்ய முடியாத நட்டமாகும் என்று யாம் கருதுகின்றோம்.

திருவிக அவர்கள் சமயவுலகிற்கே மாறுபட்டவர்கள் எனச் சைவவுலகம் மதித்தது. மாற்றுக்கண் கொண்டு மதிப்பிட்ட சைவவுலகம் தமிழ்த்தந்தை திருவிக அவர்களை வெறுத்து ஒதுக்கத் தலைப்பட்டது. திரு.வி.க அவர்கள் சைவமும் தமிழும் பற்றி வரைந்த நூல்கள் தமிழன்னையின் மணிமுடிகளாக மிளிர்வன. அவர்கள் வரைந்த மடாதிபதி என்ற நூலே எம்மை இக்கோலம் பூணச் செய்தது.

அவர்கள் விதைத்த நல்லறவுணர்ச்சியில் மக்கட் சமுதாயம் விழிப்படையத் தொடங்கியது. அவர்களின் பேருணர்வால் அவர்வழி வந்த தமிழினத்தார் வாழ்வில் அவர் வாழ்ந்து வருகின்றார் என்ற சொல்லை நாம் படைத்துத் தரவேண்டும். "மீண்டும் திரு.வி.க அவர்கள் தமிழகத்தில் தோன்ற வேண்டும்” எனப் பிரார்த்தனை செய்யுங்கள். அவர்களின் எழுத்தும் சிந்தனையும் நம்மிடம் உண்டு. திரு.வி.க அவர்கள்போல் எல்லோரும் தமிழும் சைவமும் நிரம்பப் பெற்ற அன்பர்களாக வாழ ஆசை கொள்ளுங்கள். ஒவ்வொரு தமிழனும் தமிழ்நாட்டிற்குத் தன்னால் என்ன செய்ய முடிந்தது என்பதை நாளும் சிந்தியுங்கள்.