பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

60

அருள்நெறி முழக்கம்


இன்றைய நிலையில் எத்தனையோ தோழர்கள் அழகுபடப் பேசுவார்கள் - எழுதுவார்கள். ஆனால் அதன்வழி நடப்பாரைத் தான் காண முடியவில்லை. இலக்கிய ஏடுகளைப் படிக்கின்ற காலத்து அதன் பொருள்களை நன்கு புரிந்து கொண்டால்தான் அதனை நம் வாழ்வில் அனுபவித்தல் இயலும். அனுபவிக்கும் உள்ளத்தையிழந்த காரணத்தால்தான் இக்காலத் தமிழர்கள் பண்டையிலக்கியங்களைப் புரிந்து கொள்ளாமல் வாழ்கின்றனர்.

"நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமென் றோர்மணி,
யாரம் படைத்த தமிழ்நாடு"

என்று பாரதி பாடுகின்றான். சிலப்பதிகாரத்தில் காணப்படும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துக்கள். நம் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் வகையில் அம்முத்துக்கள் ஒளிவீசுவதை அனைவரும் படித்துணர்ந்து நம் வாழ்விற் சிலப்பதிகாரத்துக்கு முதலிடம் கொடுத்தல் வேண்டும். பொய்மை நிறைந்த புரட்டிற்கும், வேண்டாத ஆராய்ச்சிக்கும் நாம் இடம் கொடுத்தல் கூடாது. "ஆக்கவுங் காக்கவும் வல்லான் ஒருவன் இருக்கின்றான்; அவனே தலையாவான்” என்று உளமார நினைத்து வாழ்த்தி வணங்குங்கள்.

பண்டையிலக்கியங்கள் போன்று இற்றை நாளில் நந்தமிழகத்துப் புதுமையான காப்பியம் ஏதேனும் தோன்றியது உண்டா? ஒன்றிரண்டு தோன்றியிருப்பினும் அவை மாறுபட்ட கருத்துக்களையும் இடக்குச் சொற்களையும் பரப்புவனவாக இருக்குமேயன்றிப் பண்டைத் தமிழர் பண்பாட்டைச் செவ்வனம் விளக்குவனவாக இருக்க மாட்டா. பண்டையிலக்கியங்கள் இன்றுவரை அழியாதிருப்பதன் தலையாய காரணம் என்னை? அவற்றை இயற்றியருளிய ஆசிரியர்கள் தலையான அருள் உள்ளம் படைத்த பெருமக்களால் ஆக்கப்பட்ட காப்பியங்களுக்குத் தனித்ததோர் தெய்வீக சக்தியுண்டு.

நூற்புலமை மட்டும் பெற்றோர் சொல்லடுக்கு இணைத்து எழுதும் நூல்கள் சிரஞ்சீவிக் காப்பியங்கள் ஆகமாட்டா.