பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பவை கற்க...!

நாள்தோறும் புற்றீசல்கள்போல் நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் வாசகசாலை எத்தகைய தொண்டு செய்ய வேண்டும் என்பதை எண்ணித்தான் “கற்பவை கற்க” என்று பேச விரும்புகின்றோம். இன்று இலக்கிய வளர்ச்சியைப் பற்றிச்சொல்ல வேண்டியதில்லை. நேற்று முன்தினம் சென்னை நகரிலே நடைபெற்ற பாரதி விழாவிலே அமைச்சர் ஒருவர், “முன்னைய இலக்கியங்களைப் போற்றிக் கொண்டிருப்பதிலே பயனில்லை. இன்னும் புதுப்புது இலக்கியங்கள் தோன்ற வேண்டும். திருவள்ளுவரைப் போல், கம்பரைப் போல் இலக்கியங்கள் ஆக்கித்தர முன்வருதல் வேண்டும்” என்று பேசி இருக்கின்றார். அதைப் பற்றி நமது கருத்தைச் சொல்கின்றோம்.

பழைய இலக்கியங்களை உணர்ந்து பேசுகின்ற படிக்கின்ற - பாராட்டுகின்ற நிலை இன்னும் இந்த நாட்டில் வளரவில்லை. திருவள்ளுவரை முற்றிலும் இன்னும் உணர்ந்தாரில்லை. ஒருசிலர் உணர்ந்திருந்தாலும் மாறுபட்ட நிலையில்தான் உணர்ந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் திருவள்ளுவரைப் போல் இலக்கியம் செய்ய வேண்டும் என்றால் நிச்சயமாகப் பகற்கனவுதான். முதலில் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் நாட்டிலே நன்றாகப் பரவவேண்டும். அதனுடைய அறநெறிக் கொள்கைகள் பரவவேண்டும். அதன்பின்தான் புது இலக்கியங்கள் தோன்ற வழிவகுத்துக் கொடுக்கலாம். அப்படி இல்லாமல் இலக்கியம் தோன்றினால் அது இலக்கியமாக இராது.