பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

68

அருள்நெறி முழக்கம்


நம்முடைய வரலாற்றைப் படித்துப் பார்த்தால் அதிகமாகக் காணப்பெறுவது போரே. அறத்திற்கும் அறத்திற்கு மாறுபட்டவற்றுக்கும் போராட்டம். ஆனால் என்றும் அறம் பிறரால் பாராட்டப்படுகின்ற நிலையில் போர்க்களத்தில் வெற்றி பெற்றதில்லை. அறத்தை மறம்தான் போலி வெற்றி கொண்டது. அறத்தின் உயிர்ப்பு நிலையில் பல உத்தமர்கள் பலி கொடுக்கப்பட்டிருக்கின்றார்கள். பலி கொடுக்கப்பெற்ற அவர்கள் கருத்து, சிந்தனை இன்றும் உலகத்தில் வாழ்கின்றது. இன்னும் பல்லூழிக் காலம் வாழும். அதனால்தான் இப்போராட்டம் இலக்கியங்களிலெல்லாம் பேசப்பெறுகின்றன.

சீனஞானி "கன்பூஷியஸ்” என்பார். அவருக்கும் திருவள்ளுவருக்கும் எத்தனையோ இடங்களில் ஒன்றுபட்ட எண்ணங்கள். அறத்தைத் தென்றல் என்று சீனஞானி கூறுவார். அறத்திற்கு மாறுபட்டனவற்றை வாடையென்பார். இந்நாட்டில் தான் தென்றலை அனுபவித்திருக்கின்றோம் என்று எண்ணியது உண்டு. ஆனால் தென்றலும் வாடையும் அங்கே பேசப் பெறுகின்றது. உடல் நலத்துக்கு ஏற்றது. தென்றல். அதற்கு மாறுபட்டது வாடை. அதுபோல, அறம் இன்பம் தரும். மறம் துன்பம் தரும். இவ்வாறு சீனஞானி விளக்கியிருக்கின்றார். இத்தகைய அறவுணர்ச்சியையூட்டும் இலக்கியங்கள்தான் தேவை. இன்று ஆங்கில மொழிக்கு ஒரு சிறப்பு உண்டு. எது இலக்கியம் என்று அவர்கள் அறிந்து சொல்லியிருக்கின்றனர். "வாழ்க்கை முறையை எடுத்துக் காட்டுவது இலக்கியம்” என்று அட்சன் சொல்லுகின்றார்.

திருவள்ளுவர், இந்த நாட்டிற்குக் கொடுத்த ஆணை "கற்பவை கற்க” என்பது. இதனை நீங்கள் கடைப்பிடியுங்கள். புதிதாக இலக்கியங்கள் தோன்றத்தான் வேண்டும். பண்டை இலக்கியங்கள் படிப்பாரற்றுக் கிடக்கப் புதிதாக இலக்கியம் செய்தவதென்றால் அதைவிடப் பித்தேறிய செயல் வேறு எதுவுமில்லை.